ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழு விஷேடக் கூட்டம் நேற்றிரவு வியாழக்கிழமை இரவு (23) அட்டாளைச்சேனை ஆற்றங்கரையோர ஹபானா ஹோட்டல் பூங்கா வளாகத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் உச்சபீட உறுப்பினருமாகிய ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.எம்.உவைஸ், ஐ.எல்.நஸீர், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் ஏ.பீ.எம்.ஏ.காதர், மத்திய குழுவின் ஆலோசகர்களான யூ.எல்.வாஹிட், அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர், மத்திய செயலாளர் ஏ.சீ.எம்.ஹாரீத், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எல்.ஏ.பத்தாஹ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் உரையாற்றுகையில்;
எனது ஊருக்கு பல சேவைகளை செய்து இன்று மண்னரையில் வாழ்ந்து கொண்டிருக்கம் மர்ஹூம்களான பாராளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் தொகுதி முதல்வருமானா டாக்டர் ஜலால்டீன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பை ஆகியோர்களின் அரசியல் கால சேவைகளையும் அவர்களின் பெயர்களையும் நாம் மட்டுமல்ல எமது பிரதேசத்துக்கு வரும் அனைவராலும் உச்சரிக்கப்படவேண்டும்.
அவர்களின் பெயர்களை ஞாபகப்படுத்தும் வகையில், அட்டாளைச்சேனையில் கட்டி முடிக்கப்பட்ட சந்தை தொகுதிக்கு மர்ஹூம் மசூர் சின்னலெப்பையின் பெயரையும், பாவங்காய் வீதியின் பெயரை டாக்டர் ஜலால்டீன் என்ற பெயரையும் சூட்டி எதிர்வரும் மாதம் 02 ஆம் திகதி இதனை திறந்து வைக்கவுள்ளோம்.
அட்டாளைச்சேனையில் நடைபெறவுள்ள இந்த மகத்தான மாபெரும் நிகழ்வுக்கு எமது முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் றஊப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த இடங்களை திறந்து வைக்கவுள்ளார்.
அதற்காக அட்டாளைச்சேனை மத்திய குழுவிலுள்ள அனைத்து உறுப்பினர்களும், மு.காவின் போராளிகளும் தங்களின் முழு ஒத்துழைப்புக்களை தரவேண்டும் என்றார்.(ந-த்)