இலங்கை நிருவாக சேவையின் கீழ் தெரிவான ஏறாவூரைச் சேர்ந்த அல்-அமீன் என்பவர் கோறளைபற்று மத்தி பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக பொது நிருவாக அமைச்சினால் நியமிக்கப்பட்டார்.
ஆனால் இந்நியமனம் குறித்து ஏறாவூரைச்சேர்ந்த ஒரு நபர் என்பதற்காக அரசியல் பழிவாங்கல் செய்யும் நோக்குடன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான ஒருவர் குறிப்பிட்ட உதவி பிரதேச செயலாளரது நியமனத்தைத் தடுத்து கடமைப் பொறுப்பேற்பதனையும் நிறுத்தியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து இவ்விடயம் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
குறிப்பிட்ட விடயம் தொடர்பாக தலையிட்ட முதலமைச்சர் கல்வி, நிருவாகம் போன்ற விடயங்களில் அரசியல் பழிவாங்கல்களை விடுத்து சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அரசியல் மூலம் ஓர் அரசியல்வாதி எவ்வாறான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்யமுடியுமோ அதனை செய்ய முன்வரவேண்டுமே தவிர வெறுமனே பிரதேச வாதம், கட்சி பாகுபாடு காட்டி ஒருவருடைய முன்னேற்றத்துக்கு தடையாக அமைவது எந்தவொரு அரசியல் வாதியின் செயலாகவும், அமையக்கூடாது எனவும், அவ்வாறான ஒரு பண்பினை கொண்ட அரசியல்வாதிகள் உள்ள ஒரு மாகாணமாக கிழக்கு மாகாணம் திகழக்கூடாது எனவும், வன்மையாக கண்டித்து மேற்குறிபிட்ட பிரதேச செயலாளர் விடயத்துக்கு உடனடி தீர்வும் பெற்றுக்கொடுத்தார்.
குறிப்பிட்ட கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக ஏறாவூரைச்சேர்ந்த அல்-அமீன் தற்பொழுது கடமையினைப் பொறுப்பேற்று செயலாற்றுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
.jpg)