த.நவோஜ்,ந.குகதர்சன்-
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் விபுலானந்த வீதியில் உள்ள கைவிடப்பட்ட காணியொன்றில் காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் ஒன்றினை இன்று சனிக்கிழமை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை மீன்பிடி வீதியைச் சேர்ந்த முகம்மது லெப்பை முகம்மது ஹனிபா (வயது 58) என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கடல் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நபர் என்றும் வெள்ளிக்கிழமை அதிகாலை வழக்கம் போல் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர். இரவாகியும் வீடு திரும்பவில்லை என்றும், மீண்டும் தமது கணவனை சடலமாகவே காண்கின்றேன் என்று சடலத்தினை பொலிஸாரிடம் அடையாளம் காட்டிய பின்னர் மனைவி தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் மேற்படி பிரதேசத்தில் நீண்ட நேரமாக காணப்பட்டதனையடுத்து பொது மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலினையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த பொலிஸார் சடலத்தினை பார்வையிட்ட பின்னர் சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கான அனுமதியினை பெற வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியினை நாடியிருந்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதியும், மரண விசாரணை அதிகாரியுமான எம்.பீ.எம்.உசைன் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான அனுமதியினை வழங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் எடுத்துச் சென்று வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை தாம் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.(ந-த்)
.jpg)
.jpg)
