அம்பாறை, அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக்கல்லூரி மாணவன் கல்லூரியின் 3ஆவது மாடியிலிருந்து வெள்ளிக்கிழமை (13) பிற்பகல் விழுந்து ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு (13) உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவன் குர்ஆன் மனனம் செய்யும் மூன்றாம் வருட மாணவன் என்றும் இவர் வாழைச்சேனையைச் சேர்ந்த ஏ.றவுசுடீன் (வயது 16) என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளிக்கிழமை (13) பிற்பகல் 3.05க்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கல்லூரியின் 03ஆவது மாடியிலிருந்து விழுந்த மாணவனை, சக மாணவர்கள் உடனடியாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ரீ.கே.றஹ்மத்துல்லா (த.மி)
