ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-
புதிய ஆட்சி மாற்றத்தில் முஸ்லிம்கள் பலமான அரசியல் அதிகாரங்களை தக்கவைக்க முடியுமான ஒர் அழகிய சூழ் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ள இன் நிலையில் கல்முனை தொகுதி மக்கள் மாத்திரம் புறக்கணிக்கப்படுவது எவ்விதத்திலும் நியாயமாகாது.
கிழக்கு மாகாண சபை அதிகாரமாவது கல்முனைத் தொகுதிக்கு வழங்கப்படுமா? என்ற வினா கல்முனைத் தொகுதி மக்களிடையே அதிகம் தோன்றியுள்ளது.
மு.கா இற்கு புதிய அரசினால் வழங்கப்பட்டுள்ள அமைச்சு, பிரதி அமைச்சுப் பதவிகளில் ஏதாவது ஒன்று நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கல்முனைத் தொகுதி மக்கள் அமைச்சு,பிரதி அமைச்சு வழங்கப்படும் இறுதித் தருணத்தில் கூட திளைத்திருந்தார்கள்.
அவர்களின் நினைப்புக்களில் மண்ணை அள்ளிப் போட்டாப் போல் மு.கா கட்சியின் செயற்பாடுகள் இறுதித் தருணத்தில் அமையப் பெற்றிருந்தமையினை யாவரும் அறிவர்.
பொத்துவில் தொகுதியில் மக்களால் தெரிவு செயப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக பைசால் காசிம் இருந்த நிலையிலே அந்த தொகுதிக்கு மேலும் ஒரு தேசிய பட்டியலினை கட்சியின் செயலாளருக்கு வழங்கி பொத்துவில் தொகுதியினை மு.கா வலுப்படுத்தி இருந்தது.மேலும்,மு.கா பொத்துவில் தொகுதிற்கே அமைச்சை வழங்கிய விடயம் இன்னும் இன்னும் விமர்சனத்தைத் தோற்றுவித்துள்ளது.
கட்சியின் செயலாளர் நாயகம் என்ற வகையில் இது வழங்கப்பட வேண்டிய ஒன்றுதான் என்ற போதிலும் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருப்பவர்களுக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டிய பொறுப்பு கட்சியின் தலைமைக்கு உள்ளது என்பதை யாரினாலும் மறுக்க முடியாது.எனவேஇஎதிர்காலங்களிலாவது தங்கள் தவறினை மு.கா திருத்திக் கொள்ள வேண்டும் என்பது வெளிப்படை உண்மை.
மு.கா தவறு விட்ட சில நொடிகளிலேயே தங்கள் தவறினைத் திருத்திக் கொள்ள கிழக்கு மாகாண சபை விடயத்தில் காலம் இன்னுமொரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. இதனையாவது மு.கா சரியாக பயன்படுத்துமா..?? என்பதுதான் கல்முனைத் தொகுதி மக்கள் ஆதங்கங்களாக இருக்கின்றது.
எனவே முதலமைச்சு விடயத்தில் ஒட்டு மொத்த கல்முனைத் தொகுதிக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மாகாண சபை உறுப்பினர் உள்ளார்.இவர் மிகவும் திறமையாக மாகாண சபை உறுப்பினர்களின் குழுத்தலைவராக சிறந்த தலைமைத்துவத்தினை வழங்கி வழி நடத்திக்கொண்டிருப்பது மாத்திரமின்றி ஒரு முதலமைச்சுக்குரிய அனைத்து தகுதிகளும் தன்னகத்தே வைத்துள்ள ஏ.எம் ஜெமீலை நியமிக்க வேண்டும் எனக் கருதுகின்றனர்.இன் நியாயமான மக்கள் கருத்தினை மு.கா தலைவரும் கட்சியும் தங்கள் மேலான கவனத்திற் கொள்ள வேண்டிய கடப்பாடு உள்ளது என்பதனை மறுக்க முடியாது.
கடந்த பல தாசாப்தங்களாக கல்முனை தொகுதி அமைச்சரவை அமைச்சுக்களையும் பிரதி அமைச்சுக்களையும் கொண்டிருந்த ஒரு தொகுதி என்பது இங்கு குறிப்பிடுவதோடு தற்போது உள்ள மாகாண சபை அதிகாரதினூடாகவாவது இது பூர்த்தி செயப்படுமா என்ற கேள்வி கல்முனை மக்களை தொக்கி நிற்கிறது.