ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நாளை 8ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ளதையடுத்தே மேற்படி வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்கள் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் அதேதினம் 9 மணி முதல் 11.30 மணி
வரை ஆட்சேபனைகளைத் தெரிவிக்க முடியும்.
அரசியல் கட்சியொன்றின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் 50 000 ரூபாவும் ஏனைய வேட்பாளர்கள் 75 000 ரூபாவும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும். கட்டுப்பணம் இன்று ஞாயிற்றுக்கிழமை 7 ஆம் திகதி பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படுமெனவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனுக்கள் நாளை ஏற்றுக்கொள்வதால் கொழும்பு நகரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் செயலகமுள்ள ராஜகிரிய பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் தேர்தல் செயலகமுள்ள ராஜகிரிய பிரதேசத்திலுள்ள கட்அவுட்டுகளை உடனடியாக அப்புறப்படுத்தும்படி தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவரை மூன்று சிறுபான்மை வேட்பாளர்கள் உட்பட 18 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
16 கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. நவசமசமாஜக்கட்சி சார்பில் சுந்தரம்மகேந்திரன், ஐக்கிய சமாதான முன்னணி சார்பில் இப்ராஹிம் நிஸ்தார் மொஹமட் மிஹ்லார் மற்றும் சுயேட்சையாக முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஐ.எம்.இல்யாஸ் ஆகியோரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணத்தை செலுத்தியுள்ள சிறுபான்மையின வேட்பாளர்களாவர்.

0 comments :
Post a Comment