கடந்த 12.11.2014 புதன்கிழமை கொழும்பு முத்தையா மைதானத்தில் “நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து பாராளுமன்ற அதிகாரத்தை வலுப்படுத்துவோம்” என்ற தொனிப்பொருளில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
ஜாதிக ஹெல உறுமய கட்சியில் பாராளுமன்ற உறுப்பினரும் தூய நாளைக்கான தேசிய சபையின் ஸ்தாபகருமான மதிப்புக்குரிய அத்துரலிய ரத்ன தேரர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படிக் கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக அதன் பொதுச்செயலாளர் MR.நஜா முஹம்மத் கலந்துகொண்டு உரையாற்றும்போது,
“நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து பாராளுமன்றத்துக்கு அதிகாரத்தை வழங்கி நாட்டில் ஜனநாயகத்தையும் நீதியையும் நல்லாட்சியையும் நிறுவக்கூடிய ஒரு பொது வேலைத்திட்டத்திலேயே நாம் அனைவரும் இங்கு ஒன்றுகூடி இருக்கிறோம்.
இக்கூட்டம் ஜனாதிபதிக்கு எதிராகவோ, அரசாங்கத்துக்கு எதிராகவோ என்று யாரும் கருத வேண்டிய அவசியமில்லை. நாட்டு மக்கள் அனைவரும் இனமத பேதமின்றி எதிர்பார்த்திருக்கும் இத் தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய சகல வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் உள்ளவர் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே.
எனவே முழுநாடும் வேண்டி நிற்கின்ற இத்தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு நாம் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கின்றோம்.
வடக்கு கிழக்கில் முஸ்லிம் சமூகத்தைத் தளமாகக் கொண்டு செயற்பட்டுவரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட, அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அமைச்சர் அதாவுல்லாஹ் போன்றவர்களையும் இத்தேசிய வேலைத்திட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றது. முஸ்லிம் கட்சிகளின் அமைச்சர்களும் நாட்டில் நல்லாட்சி ஒன்றைக் கட்டியெழுப்புவதற்க்கான காலத்தின் தேவையாகக் கருதப்படுகின்ற நாட்டின் முதன்மைப்படுத்தப்பட்ட விவகாரமாக இருக்கின்ற இத்தேசிய வேலைத்திட்டத்தில் இணைந்துவிட்டாலும் இல்லாவிட்டாலும் முழு முஸ்லிம் சமூகத்தையும் நாடு எதிர்நோக்கியிருக்கின்ற மாற்றத்தையும் நோக்கி அணிதிரட்டும் பணியை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முன்னெடுக்கும் இன்ஷா அல்லாஹ்.” என்று குறிப்பிட்டார்.
மேற்படிக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அதன் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கரு ஜயசூரிய (பா.உ), சஜித் பிறேமதாச (பா.உ), மங்கள சமரவீர (பா.உ), தயா கமகே (பா.உ) உள்ளிட்ட ஏனைய சிரேஷ்ட உறுப்பினர்களும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் மதிப்புக்குரிய ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் ஜே.வி.பியின் தொழில்சங்க தலைவர் லால் காந்தா உள்ளிட்ட சிவில் அமைப்புக்கள், தொழிச்சங்கங்களின் பிரதிநிதிகள், கல்விமான்கள், பல்கலைக் கழக சமூகத்தினர், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அத்துடன் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஸ்தாபகரும் கோட்ட நாகவிகாராதிபதியுமான மதிப்புக்குரிய மாதுளுவாவே சோபித தேரர் அவர்கள் கலந்துகொண்டு விஷேட உரையாற்றினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
.jpg)
0 comments :
Post a Comment