ஒக்டோபர் 6 ஆந்திகதி உலக ஆசிரியர் தினம் -கட்டுரை

அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர்-

சிரியரின் வலியுணர்வினை சமூகத்திற்குள் சமர்ப்பிப்போம்
வழமைபோன்று இம்முறையும் உலக ஆசிரியர் தினம் இலங்கையிலும் கொண்டாடப்படுகின்றது. இத்தினத்தில் ஆசிரியப்பெருந்தகைகள் ஆற்றியசேவைகளைப் பற்றியும், அவர்கள் மாணவர்களுக்காக தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்துக் கொள்வதுபற்றியும், ஆசிரியத் தொழிலின் மகத்துவம் பற்றியெல்லாம் மேடைபோட்டுப் பேசப்படும் திருநாள். நாட்டின் ஜனாதிபதி தொடக்கம் உள்ளுர் அரசியல்வாதிகள் வரையும் ஏன் மாணவர்களால் மாலையிட்டு வாழ்த்தும் படலம் வரையிலும் ஆசிரியரின் சேவைகளும், அவர்களது செயற்பாடுகள் பற்றியெல்லாம் விலாவாரியாக பேசப்படும். இதனை கேட்பதற்கும், பார்ப்பதற்கும் மிகமிக சந்தோஷமாக இருக்கும். இதனால் பூரிப்படைவோரும் உண்டு. உளத்தளவில் கவலைப்படுவோரும் உண்டு.

நமது நாட்டில் இத்தகைய ஆசிரியர் தொழிலைப் பொறுத்தளவில் பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும் அனுபவிக்க வேண்டிய இக்கட்டான ஒருநிலைமை காணப்படுவதனால்தான் ஆசிரியர்கள் வேதனைப்படுகின்றனர். ஏனெனில் ஒரு சாதரணமான வருடாந்த சம்பள ஏற்றத்தைப் பெறவேண்டுமாக இருந்தால்கூட சிலவேளைகளில் பலமாதங்களின் பின்னரே கிடைக்கும். 

ஏனைய தொழில்களைப்போன்று இருந்த இடத்தில் செய்கின்ற ஒரு தொழிலல்ல ஆசிரியத் தொழில். வாண்மைவிருத்தியோடு சம்பந்தப்பட்டதும், மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கேற்ற விதத்தில், கற்றல் முறைகளைக் கவனத்திற்கொண்டு, எவ்வாறு கற்பித்தால் அவர்களுக்கு அவர்களது அடைவினை அதிகரிக்கச் செய்யலாம் என்பதை உணர்ந்து, உபகரணப்பயன்பாடு, செய்முறைப் பயிற்சிகள், உண்மைப் பொருளைக் காண்பிப்பது மொத்தத்தில் அவர்களது உளமறிந்து செயற்படவேண்டிய ஒரு தொழிலாகவே இதனை பார்க்கமுடியும்.

இதனால்தான் இதன் வலியானது மிகமிகக் கனதியானது. பாடசாலையில் கற்பிக்கின்ற ஆசிரியர் மாணவர்களின் உணர்வறிந்து, கற்றலுக்குத் தயார்நிலைக்குக் கொண்டுவந்ததன் பின்னர் கற்றலை ஆரம்பிக்க வேண்டும். அதற்கான உபாயங்களைக் கையாண்டு கற்றலை தொடரவேண்டும். தேர்ச்சிமையக் கலைத்திட்டத்தின் உண்மையான வடிவத்தோடு மாணவர்களை ஒன்றிக்கவைத்து மாணவர்களை இயங்கச் செய்வதன் மூலம் கற்றலுக்கு உதவுகின்ற ஒருநபராக வகுப்பறையில் ஆசிரியர் துலங்குகின்ற ஒருநிலைமையும் உண்டு. இந்த நிலைமைக்கு மாற்றமாக வெறுமனே நெட்டுறுச் செய்து அதாவது மனப்பாடமிட்டு, வெறும் ஏட்டுக் கல்வியை வழங்குவாராக இருந்தால் அந்தப் பிள்ளை பரீட்சைக்கு மாத்திரம் தயாரிக்கப்படுகின்றார் என்பதே அர்த்தமாகும். இதனை அன்றைய கல்விமுறைகளில் காணப்பட்டிருந்தாலும் இன்றைய கல்விமுறையில் இவை ஒழிக்கப்பட்டு மாணவர்களை தேடலுள்ளவர்களாக மாற்றுகின்ற ஒரு செயற்பாட்டினையே இன்றைய கல்விமுறையில் காணப்படுகின்ற விசேட அம்சமாகும்.

இந்த அம்சம் சரியான முறையில் கொண்டுசெல்வதற்காக அந்த ஆசிரியர் புதிய விடயங்களை எல்லாம் தேடியறிய வேண்டி சூழ்நிலைக்குள் தள்ளப்படுகின்றார். இவ்வாறான வலிகளையெல்லாம் சுமந்து கொண்டு வகுப்பறைக்குள் நுழைகின்ற ஆசிரியரானவர் தனது தேடல்களை ஒப்பிவித்து மாணவர்களையும் அவ்வாறான ஒருநிலைமைக்குள் உள்வாங்கும் எத்தனங்களை கைக்கொண்டு மாணவர்களை சமூகத்திற்கான சிறந்த பிரஜையாக, அறிவார்ந்த சமூகத்தின் கண்களாகவும் மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றார். இவ்வாறான ஆசிரியர்களுக்கு வருடத்தில் ஒருதினம் ஒதுக்கப்பட்டு பாராட்டப்படுவதன் மூலம் உளம் திருப்திப்பட்டாலும் அவரது பின்புலத்தில் காணப்படுகின்ற எத்தனையோ விடயங்கள் கிடப்பில் காணப்படுவதானது கவலை அளிக்கின்றது என்பதையும் ஆசிரியர் சமுகத்தைக் கொண்டுள்ள உரித்துடையோர் சிந்திக்கத் தவறுவதும், அவர்களது வலியுணர்ந்து செயற்படாமல் இருப்பதும் ஆசிரியர் சமுகத்திற்கு வேதனைதருகின்ற ஒருவிடயம் என்பதை எத்தனைபேர் உணர்ந்துள்ளனர்.

ஆசிரியர் பணியில் மற்றொரு விடயம் மாணவர்களுக்குரிய தண்டனை வழங்குகின்றவிடயமாகும். ஆசிரியர் சேவையைப் பொறுத்தளவில் மாணவர்களது தவறுகளை, அவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற பிழையான நடத்தைக் கோலங்களைக் கண்டறிவதற்கான தனியான பிரிவுகள் எதுவும் இல்லை. பொலிஸ்பிரிவு போன்று குற்றத்தைக் கண்டுபிடிப்பதற்குரிய குழுக்களோ, அதிகாரிகளோ பாடசாலைகளில் காணப்படுவதில்லை. ஆசிரியரே இதற்குரியவராகவும் காணப்படுகின்றார். இந்தக்குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு பாடசாலையில் உடன் தண்டனை வழங்குவாராக இருந்தால் அந்த ஆசிரியர் நையப்புடைக்கப்படுகின்ற வேதனைகளும் இன்றைய காலகட்டங்களில் நடந்தேறியுள்ளன. தண்டணை என்பது எவ்வாறு வழங்கப்படுதல் வேண்டும் என்கிற சட்டச் சிக்கல்கள் பல காணப்பட்டாலும் வகுப்பறையில் சுமார் 40மாணவர்களுக்கு கற்பித்தல் பணிசெய்கின்ற கஷ்டம், அதன் வலியை உணர்கின்ற சமுகம் ஆசிரியரை பாராட்டமல் இருக்கவே முடியாது.

இந்தக் கஷ்டமான சூழ்நிலையில் மாணவர்களின் வெளிப்பாடு, அடைவுமட்டம் அதிகரிக்கப்படவேண்டும் என்கிற ஆசையில் ஆசிரியர் மாணவர்கள் தவறிவிடுவார்களாக இருந்தால் கவலை கொண்டு சிறுசிறு தண்டனைகளை வழங்குவதற்கு ஆசிரியர் எத்தனிப்பர். இத்தண்டனை சற்று அதிகரித்துவிட்டால் ஆசிரியர் பொலீஸ் நிலையத்தில் கைகட்டி நிற்;;கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றார். இந்த வேதனையின் வலியினை சமூகம் எந்தளவுக்கு உணர்ந்துள்ளன என்பதும் இந்த வேளையில் திரும்பிப்பார்க்க வேண்டியும் உள்ளது.

ஐவ ளை யடறயலள டிநவவநச வழ டிரடைன ரி உhடைனசநn சயவாநச வாயn சநியசைiபெ அயn என்கிற ஒருபிரபல்யமான கூற்றின் அடிப்படையில் பார்க்கின்றபோது வளர்ந்தவர்களைத் திருத்துவதைவிட சிறுவர்களைக் கட்டி வளர்ப்பது மேலானது என்பதாகும். அதாவது சிறுவயதில்; மாணவர்களைத் திருத்தாது அவர்கள் வளர்ந்ததன் பின்னர் அவர்களது தவறுகளைத் திறுத்த முற்படுவது நனைத்துவிட்டு தூக்குவதற்கு ஒப்பானது போன்றது என்கிற விளக்கத்தைக் கொடுக்கமுடியும். ஆதலால்தான் மாணவர்கள் செய்கின்ற தவறுகள் கண்டறியப்பட்டு அதனை அவ்விடத்திலேயே திருத்தம் செய்து கொள்ள வேண்டும். 

இத்தகைய செயற்பாட்டினை ஆசிரியர் ஒருவரினாலேயே முடியும். மாணவர்களின் தவறுகளை இனங்காண்பதற்குரிய உளவியல் தத்துவங்களை ஒரு ஆசிரியர் சிறந்தமுறையில் உள்வாங்கிக் கொள்வாராக இருந்தால் மாணவர்களின் தவறுகள் சிறந்த முறையில் திருத்தப்படுகின்றபோது அந்த ஆசிரியர் அந்த மாணவர்களால் என்றுமே நினைவிற் கொள்ளப்படுகின்றார்.
அதேவேளை இன்றைய கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற ஆசிரியர் தன்னுடைய வகுப்பறையில் காட்சிப்படுத்தப்படவேண்டிய விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியவராகவும் காணப்படுகின்றார். தான் கற்பிக்கின்ற பாடத்தினை சிறந்தமுறையில் விளக்குவதற்கு உபகரணப் பயன்பாடு சிறந்த மார்க்கமாக உள்ளது. மாணவர்களின் கவனத்தைக் கலைக்காமல்; உபகரணங்கள் கொண்டு கற்பிக்கின்றபோது மாணவர்கள் கவரப்படுவார்கள். இவ்வாறான உபகரணங்கள் வகுப்பறையில் சேகரிக்கப்பட்டு அது காட்சிப்படுத்தப்படுவதன் மூலம் கற்றலை தவறவிடுகின்ற அல்லது இடர்படுகின்ற மாணவர்களுக்கு பரிகாரம் செய்வதற்கு அவ்வுபகரணங்கள் பிரயோசனப்படுகின்றது. அதேவேளை வகுப்பறையினை மேற்பார்வை செய்து மாணவர்களை மதிப்பிடுகின்ற அதிகாரிகள் வருகை தருகின்றபோது சிறந்த முறையில் துலங்காது இருப்பவர்களுக்கும், மாணவர்களின் சிறப்பான அடைவுக்கும், வகுப்பறைகளின் உயிரோட்டமான தன்மைக்கும் வித்தியாசமான புள்ளிகள் வழங்கப்படுகின்றபோது குறைவான புள்ளிகளைப் பெறுகின்ற ஆசிரியர்கள் தவறை உணராது அதிகாரிகளை திட்டித்தீர்க்கின்ற சம்பங்களும் ஆசிரிய மதிப்பீட்டாளர்களுக்கும் வேதனை தருகின்றது. இதனையும் இச்சந்தர்ப்பத்தில் ஞாபகமூட்டவேண்டும்.

எனவேதான் ஆசிரியர் சேவையானது ஒரு தொழிலாகவன்றி சேவையாகப் பார்க்கப்படுகின்றது. அதற்காக அவருக்கு வழங்கப்படுகின்ற ஊதியம் ஏனைய அரச தொழில்களைப்போன்று குறைவில்லாது இருந்தாலும் ஆசிரியரின் சம்பளம் அதிகம் என்று வாதிடுகின்றவர்களும் உண்டு. உண்மைதான் ஆசிரியர் சேவை தரம் ஒன்றுக்கு வருகின்ற ஆசிரியர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற சம்பளத்தை அவர் சாதாரணமாக படிமுறைக்கேற்ப பெறுவதற்கு சுமார் 30ஆண்டுகளாவது பிடிக்கும். 

அதனை விரைவாகப் பெறுவதாக இருந்தால் அவரின் திறமையைப் பொறுத்தது. அதற்காக அவர் நிறையவே செலவுசெய்து படித்து பட்டங்கள் பலவற்றை வாங்கியே அதனை பெறுதல் வேண்டும். அப்படியானால் இந்த 30வருடங்களில் அவரது வாழ்வின் சுமைகள், அவரது குடும்பம், சமூகத்தின் அந்தஸ்து போன்றவற்றையெல்லாம் எடுத்துப் பார்க்கின்றபோது சாதரணமாக வாழ்வில் எதிர்நீச்சல் போடவேண்டிய வலியுணர்வினை எதிர்நோக்க வேண்டியும் உள்ளது.

எனவே, ஆசிரியர் தொழிலின் மகத்துவம் போற்றப்படுதல் வேண்டும். அதற்கான தினத்தில் மாத்திரம் மாலையிட்டு ஆசிரியரின் சேவைகளையும், புனிதத்தன்மைகள் பற்றியும் பாராட்டப்படுதல் அவசியமாக இருப்பதுபோல அவர்களின் ஊதியங்களில் காணப்படுகின்ற குறைபாடுகளும் நிவர்த்திக்கப்படுதல் வேண்டும். கஷ்டப்பட்டு உயர் கற்கைகைளைப் பூர்த்திசெய்கின்ற ஆசிரியர்களுக்கு உரிய முறையில் அதற்கான கொடுப்பனவுகள், பதிவியுயர்வுகள் வழங்கப்படுதில் பாரபட்சம் காண்பிக்கப்படுகின்றன. பட்டங்களை முடிப்பதில் உள்ள கஷ்டங்கள் கொஞ்சநெஞ்மல்ல. மாணவர்களின் சிறந்த அடைவுக்கும், மாணவர்களினது உளமறிந்து கற்றலை மேற்கொள்ளவும் ஆசிரியரின் உயர்கற்றல், பட்டம்பெறுதல் அவசியமாகும். 

அதனைக் கஷ்டப்பட்டு, பணச்செலவுசெய்து முடித்தாலும் உரிய சம்பளப்படிகள் கிடைப்பதில் இழுத்தடிப்புக்கள் காரியாலங்களில் நடைபெறுகின்றன. இதனையும் இன்றைய தினத்தில் ஆசிரியர் சங்கங்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

இன்று ஆசிரியர்கள் மத்தியில் வேகமாகப் பேசப்படுகின்ற மற்றொரு விடயம் டியூஷன் கல்வி பற்றியதாகும். டியூஷன் கல்வி இன்று ஒழிக்கப்படமுடியாமல் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பலத்த சவாலைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. பாடசாலையில் கற்பிக்கின்ற அதே ஆசிரியர் தனியார் வகுப்பில் நன்றாகக் கற்பிக்கின்றார். அங்கு பணம் பரிமாறப்படுகின்றது. பாடசாலையில் வெறுமையாக இருந்துவிட்டு டியூஷன் என்கிற பேரில் ஒருசில ஆசிரியர்கள் தன்னுடைய வாண்மைத்துவத்தைக் காரணம் காண்பித்து கல்வி விற்கப்படுகின்றது. இது ஒருவகையில் நியாயமாகக் பட்டாலும் வகுப்பறையில் உரிய முறையில் கற்பிக்காமல் விட்டுவிட்டு வெளியில் கற்பிப்பதானது கவனிக்கப்படவேண்டிய விடயமாகும். 

இதன் காரணமாக மாணவர்கள் தனியார் கல்வியூட்டங்களில் வரவினை கட்டாயப்படுத்தப்படுத்தப்படுகின்ற ஒருநிலைமையும் காணப்படுகின்றது. இது நன்றாக பாடசாலையில் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு பலத்த வேதனையினை கொடுத்துவருகின்றது. இந்த டியூஷன் ஆசிரியர்கள் மாத்திரம்தான் சிறந்த ஆசிரியர்கள் என்கிற பதிவு பெற்றோர் மத்தியிலும் காணப்படுகின்றது. இதனையும் சமூகம் உணர்ந்து கொண்டு பாடசாலைகளில் கவனம் செலுத்தப்படுதல் அவசியமாகும்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக தயார் செய்யப்படுகின்ற மாணவர்கள் இரவுபகல் பாராது கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இம்முறை நடைபெற்ற பரீட்சை முடிவுகள் பலத்த கேள்விகளை தொடுத்துள்ளன. வகுப்பறையில் கற்பிக்கவேண்டிய பாடத்திட்டத்தோடு சார்ந்ததாகவே வினாக்கள் அமைந்திருந்தன. அப்படியானால் தரம் 5 மாணவர்களின் கற்றலானது தரம்1- 4வரையில் சிறந்த முறையில் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி நூல்களைத் துணையாகக் கொண்டு ஆசிரியர் கற்றலில் ஈடுபடுகின்றபோது மாணவர்களின் அடைவினை அதிகரித்துக் கொள்ள ஏதுவாகின்றது. ஆனால் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியை கண்டறியாது, வாசிக்காது குடிசைக் கைத்தொழில் போன்று டியூஷனில் ஈடுபடுகின்ற ஆசிரியர் என்கிற போர்வையில் காணப்படுகின்ற நபர்களும் இன்றைய கல்விமுறையில் பலத்த சவாலை பாடசாலை ஆசிரியர்கள் எதிர்நோக்குகின்றனர்.

இவ்வாறான பலத்த வலிகளைச் சுமந்துள்ள ஆசிரியர் சமூகத்தின் உயிரோட்டமான பணிக்கு இத்தினம் ஒத்தடம் கொடுக்கப்படுவது ஒருவகையில் சந்தோசமாக இருக்கின்றது. கல்வி கற்பித்தல் வெறும் பணி அல்ல, அது வாழ்வியல் முறை. மாறிவரும் சர்வதேச சூழலை கருத்தில் கொண்டு புதிய தலைமுறையினரை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். அவர்களது நாட்டத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை உருவாக்க வேண்டும். சமூகம் முன்னேற வேண்டுமென்றால், ஆசிரியர்கள் காலத்தைவிட இரு மடங்கு வேகமாக செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கையிலும் ஆசிரியர் முக்கிய பங்கு வகிக்கிறார் என்பதை சமூகம் உணர்ந்து கொண்டாலே போதும்.
<நன்றி - தமிழ்த்தந்தி>

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :