பைஷல் இஸ்மாயில்-
இனமத உறவுகளை மேன்மேலும் வழுப்படுத்துகின்ற ஒரேயொரு சாதனம் அது விளையாட்டாகும். இந்த விளையாட்டின் மூலம் முஸ்லிம், தமிழ், சிங்களம் என்ற பேதங்களையும் மறந்து செயற்படுத்துகின்ற இந்த விளையாட்டானது இது ஒரு பாரிய சக்தியாகும். எமது இனமத உறவுகளை விளையாட்டின் மூலம் எவ்வளவு தூரம் வழுப்படுத்துகின்றோமே அந்தளவு தூரம் எமது உறவுகளை வாழ்நாள் முழுவதும் பேணிக்கொள்ளலாம் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட பிரதேச செயலகப் பிரிவுகளின் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா சனிக்கிழமை (02) அட்டாளைச்சேனை அஸ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றபோது இந்நிகழ்வில் விஷேட அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துகின்ற தேவை இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கும் பாரிய பொறுப்பிருக்கின்றது. அவர்களின் குறை நிறைகளை அறிந்து அந்த குறை நிறைகளை இந்த மாவட்ட அரசியல்வாதிகளின் காதுகளுக்கு எத்திவைக்கின்ற பாரிய பொறுப்பும் கடமைப்பாடும் மாவட்ட, பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கு இருக்கவேண்டும்.
இவ்வாறு இந்த உத்தியோகத்தர்கள் செயற்பட்டால்தான் பிரதேச மட்ட வீரர்களை மாவட்ட வீரர்களாகவும், மாவட்ட மட்ட வீரர்களை தேசிய மட்ட வீரர்களாகவும், தேசிய மட்ட வீரர்களை சர்வதேச மட்ட வீரர்களாகவும் மாற்றியமைக்க முடியும். இந்த வீரர்களை பல வழிகளில் உற்சாகப்படுத்தி அந்த வீரர்களை எதிர்காலத்தில் சிறந்ததொரு விளையாட்டு வீரராக்குவதன் மூலம் எமக்கும் எமது பிரதேசத்துக்கும், மாவட்டத்துக்கும் மட்டுமல்லாது எமது கிழக்கு மாகாணத்துக்கும் பெருமை சேர்த்துத்துத் தரக்கூடியதாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமே இல்லை என்றார்.
0 comments :
Post a Comment