துபாயில் முதல் 'பசுமை மசூதி' திறப்பு !- 33 கோடி ரூபாய் செலவில்




சுற்றுச் சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் சயீத் துறைமுகம் அருகே சுமார் ஒரு லடசம் சதுரடி நிலத்தின் 45 ஆயிரம் சதுரடி பரப்பளவில், சுமார் 2 கோடி திர்ஹம் ( இந்திய மதிப்பு சுமார் 33 கோடி ரூபாய் ) செலவில் கட்டப்பட்ட ‘பசுமை மசூதி’ நேற்று (வெள்ளிக்கிழமை) துபாயில் திறக்கப்பட்டது.

துருக்கிய - ஓத்மானி கட்டிடக்கலையின் பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த மசூதியில் தேவைக்கேற்ப நீரை கலந்து தருவதற்கு நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. தொழுகையாளிகள் ‘ஒளு’ செய்த நீர் மீண்டும் பாசனத்துக்கு பயன்படும் வகையில் இங்கு மறுசுழற்சியும் செய்யப்படுகிறது.

மசூதியின் முகப்பு விளக்குகள் உள்ளிட்ட பெரும்பாலான மின்சாதனங்கள் சூரிய மின்சக்தியில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒரே சமயத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 மக்கள் தொழுகை நடத்தக் கூடிய அளவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த மசூதியின் தொழுகைக் கூடத்தில் பொருத்தப்பட்டுள்ள குளிர்ப்பதன இயந்திரங்கள், அந்தந்த மாதங்களின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்பவும், ஒவ்வொரு வேளையிலும் தொழுகை நடத்த வரும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும், தானியங்கி சென்சார்களின் உதவியுடன் மின்சாரத்தை சிக்கனப்படுத்தி, தொழுகையாளிகளுக்கு தேவையான சீதோஷ்ண நிலையை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், குறைந்த அளவிலான தொழுகையாளிகளின் வருகையின் போது, மைய தொழுகை மண்டபம் மூடப்பட்டு, சிறிய கூடத்தில் மட்டுமே தொழுகை நடத்தப்படும்.

வெள்ளிக்கிழமை ‘ஜும்மா’ தொழுகை மற்றும் ரமலான் மாதத்தின் ‘தராவீஹ்’ தொழுகை மற்றும் பெருநாள் ‘குத்பா’ ஆகிய நேரங்களில் மட்டுமே பெரிய மண்டபத்தில் தொழுகை நடத்தப்படும் என்பதால், இங்கு கணிசமான அளவில் மின்சார செலவையும் மிச்சப்படுத்த முடியும். இந்த மசூதி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள செடிகளும் அதிகமாக தண்ணீரை உறிஞ்சாத வகைகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இடங்களில் செலவாவதை விட இந்த பசுமைத மசூதியில் 20 சதவீதம் தண்ணீரையும், 25 சதவீதம் மின்சாரத்தையும் சேமிக்க முடியும் என்று கருதப்படுகிறது.

கலிபா அல் தாஜெர் என்பவரது முழு நன்கொடையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘பசுமை மசூதி’யை போலவே, இனி வரும் காலங்களில் துபாயில் கட்டப்படும் அனைத்து மசூதிகளும் சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவிக்காதபடி கட்டப்படும். இதன் வாயிலாக சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற சமூகப் பொறுப்புணர்வும், இயற்கை மீதான அக்கறையும் மக்களுக்கு ஏற்படும் என்று நம்புவதாக துபாயின் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அறக்கட்டளை நடவடிக்கைகளை கண்காணிக்கும் துறைக்கான இயக்குனர்-ஜெனரல் டாக்டர் ஹமத் அல் ஷைபானி தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :