கல்முனை லக்கி ஸ்ட்டார் விளையாட்டுக்கழகத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம், அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையே கடந்த ஒரு மாத காலமாக நடத்தி வந்த நோக் அவுட் அடிப்படையிலான மர்ஹும் ஏ.எம்.தௌபீக் ஞாபகார்த்த அழைப்பு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி (06.06.2014) வெள்ளிக்கிழமை கல்முனை சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
11 கழகங்கள் பங்கு பற்றிய மேற்படி சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு கல்முனை விர்லியன்ட் விளையாட்டுக்கழகமும் மருதமுனை ஈஸ்ட்டன் யூத் விளையாட்டுக்கழகமும் தெரிவாகி இருந்தது.
அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவரும் கல்முனை மாநகரசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஏ.எம்.றக்கீப் தலைமையில் இடம்பெற்ற இந்த இறுதிப்போட்டியிலும் பரிசளிப்பு விழாவிலும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீன் அவர்களும் விசேட அதிதியாக கல்முனைத் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ் அவர்களும் கலந்து கொண்ட அதேவேளை அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.ஐ.எம். அப்துல் மனாப் அவர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
போட்டியில் எந்த அணியும் வெற்றிபெறாததால் பெனால்ட்டி முறையில் மருதமுனை ஈஸ்ட்டன் யூத் விளையாட்டுக்கழகம், மர்ஹும் ஏ.எம்.தௌபீக் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது.
வெற்றி பெற்ற கழகத்துக்கு கௌரவ மற்றும் விசேட அதிதிகள் வெற்றிக்கிண்ணத்தையும் பணப்பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.




0 comments :
Post a Comment