மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில்; இறால் வளர்ப்பு நடவடிக்கை
மேற்கொள்வதற்கு குத்தகைக்கு காணி வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு கோரி
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற
உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இவ்மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது!
வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சில பகுதிகளுக்கு அடியேன் அண்மையில்
மக்கள் சந்திப்பின் பொருட்டு சென்ற போது காவேரிகுளம் உட்பட்ட பல பகுதிகளில்
மக்கள் விவசாயம் செய்து தமது வாழ்வாதாரத்தை நடாத்தும் நிலையில் தங்களது
விவசாயத்தை பாதிக்கும் வகையில் சில அரசாங்க அரசியல் வாதிகளுக்கு குத்தகைக்கு
ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகளை இறால் வளர்ப்பு என்ற வகையில் வழங்குவதாகவும்,
இது சார்பாக தங்கள் யாருக்கும் தெரியாமலே இந்நடவடிக்கை நடைபெற்றுள்ளதாகவும்,
தங்களின் வேதனையை தெரிவித்தனர்.
அத்தோடு இது தங்களுக்கு மேற்கொள்ளப்படும் பெரும் அநீதி எனவும் குறிப்பட்டனர்.
இவ்வேளை ஒருவர் 25000 ஏக்கர் காணி இதற்கு பெறுவதாகவும் குறிப்பிட்டார்.
எனவே மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அங்கு விவசாயிகளுக்கான
குளங்கள் அமைக்கப்பட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது விவசாய
தொழிலை விருத்தி செய்து வரும் இவ்வேளை இவற்றை பாதிக்கும் வகையிலும்,
அவர்களின் பாரம்பரிய தொழிலான விவசாயத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும்
மேற்கொள்ளப்படும் இறால் வளர்ப்பு திட்டத்திற்கு குத்தகைக்கு காணி வழங்கும்
திட்டத்தை தயவு செய்து நிறுத்தி உதவுமாறு அன்பாக வேண்டுகின்றேன். தங்களது
நடவடிக்கை சார்பாக பதிலை எதிர்பார்க்கின்றேன் என மேலும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பிரதிகள் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், காணி அமைச்சின்
செயலாளர், வாகரை பிரதேச அபிவிருத்திக் குழு தவிசாளர், வாகரை பிரதேச
செயலாளர், வாகரை பிரதேச சபை செயலாளர், தட்டுமுனை, ஊரியன்கட்டு கிராம
அபிவிருத்திச் சங்கங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ந.குகதர்சன்,
நிருபர்,
0778730529

0 comments :
Post a Comment