துபாயில் சிறைவாசம் அனுபவித்த தந்தையுடன் இலங்கை வரவுள்ள 05 வயது சிறுமி!



னது தந்தை கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டதிலிருந்து டுபாயில் உள்ள சிறுவர் காப்பகமொன்றில் வசித்து வரும் இலங்கை - பிலிப்பைன்ஸ் பெற்றோருக்கு பிறந்த சிறுமியொருத்தி விரைவில் தனது தந்தையுடன் மீளவும் இணைந்து தாயகம் செல்லவுள்ளதாக கல்ப் நியூஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த மாதம் ஐந்து வயதை அடைந்துள்ள எலினா எனும் பெயருடைய இந்த சிறுமி கடந்த 2009 ம் ஆண்டில் இலங்கையை சேர்ந்த தனது தந்தையின் தொழில் பறிபோனதையடுத்து அவர் அவ்வப்போது செய்து வந்த தொழில்களில் அவருக்கு உதவி செய்து வந்த நிலையில் வேலை வாய்ப்பில்லாமல் இருந்த தனது தந்தையுடன் பூங்காக்களிலும் மாடிப்படிக்கட்டுக்களிலும் உறங்கியே காலங்கழித்து வந்தார்.

பிலிப்பைன்ஸை சேர்ந்தவரான அவளது தாயாரோ ஆயுட்கால நுழைவுத் தடையொன்றை எதிர்நோக்கிய நிலையில் எலினா பிறந்து மூன்று மாதங்களின் பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்தை விட்டு வெளியேற நேர்ந்தது.

கடனட்டை மூலம் பெற்றிருந்த கடன்களை அடைக்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவரது தந்தை கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவள் தங்குவதற்கு இடமின்றி இங்கும் அங்குமாக அலைந்து திரிந்த துன்பக் கதை குறித்து எக்ஸ்பிரஸ் தினசரி கடந்த ஜனவரி 16ம் திகதி விரிவாக செய்தி வெளியிட்டிருந்தது.

பெற்றோர் திருமணமாகாத நிலையிலேயே எலினா பிறந்தாரென்பது நிரூபிக்கப்பட்டமையால் அவளது தந்தைக்கு அதன் பின்னர் ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் தந்தையின் மேன்முறையீடொன்றை அடுத்து கடந்த 17ம் திகதி அவருக்கு தண்டனை மூன்று மாதங்களாக குறைக்கப்பட்டது.

இன்னும் ஒரு சில நாட்களில் குறைப்பு செய்யப்பட்ட தனது தண்டனைக் காலத்தை பூர்த்தி செய்யவுள்ள அவளது தந்தை அதன்பின் நாடு கடத்தப்படவுள்ளார். அனைத்தும் நன்றாகவே நடப்பின் எலினா தந்தையுடன் சேர்ந்தே இலங்கைக்குப் பயணிப்பது நிச்சயமாகி விடும்.

டுபாய் பொலிஸின் மனித உரிமைகள் பொது திணைக்களத்தின் வழக்கு விவகாரப்பிரிவின் தலைவரான கப்டன் மொஹமட் நாகி அலோலாகி இது குறித்து எக்ஸ்பிரஸ் தினசரிக்கு தெரிவிக்கையில

எலினாவின் தந்தைக்கான தண்டனைக் காலம் குறைக்கப்பட்டுள்ளதனை அடுத்து அவர் விடுதலை செய்யப்படும் சாத்தியமுள்ளதெனவும் ஒருசில நாட்களில் உத்தியோகபூர்வ பத்திரங்கள் தயாரான நிலையில் இருக்க கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதாக குறிப்பிட்டார்.

எலினாவின் பிறப்பு பதிவு செய்யப்படாததால் அவளிடம் கடவுச் சீட்டொன்று இல்லாமலிருப்பதே அவளின் இலங்கை பயணத்திற்கு இடையூறாகவுள்ளது. அவளுக்கு கடவுச்சீட்டொன்றை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ள இலங்கை துணைத் தூதரகம் எலினாவின் பிறப்புக்கு அவளது தந்தை காரணகர்த்தாவாகியுள்ள நிலை குறித்த பரிசோதனையொன்றை நடத்துமாறு டுபாய் அதிகாரிகளை கடந்த பெப்ரவரியில் கேட்டிருந்தது.

இது குறித்து மேற்படி தூதரக அதிகாரியொருவர் கருத்து வெளியிடுகையில்

டுபாய் அதிகாரிகளிடமிருந்து எமக்கு மரபணு சோதனை குறித்த அறிக்கை கிடைக்க வேண்டியுள்ள போதிலும் எலினாவின் பிறப்பு அறிவித்தல் தற்போது தயாராகவே உள்ளது. குறித்த அறிக்கை எமக்கு கிடைத்ததும் அவளின் கடவுச்சீட்டை எம்மால் வழங்க முடியும் என தெரிவித்தார்.

தனது தந்தை சிறைவாசம் அனுபவிக்க சென்றதிலிருந்து எலினா பெண்கள் மற்றும் சிறுவருக்கான டுபாய் மன்றத்தின் பராமரிப்பிலேயே வளர்ந்து வந்துள்ளார்.

மேற்படி மன்றம் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு எலினா பற்றிய விபரங்கள் எதனையும் தெரிவிக்க மறுத்து விட்டது.

எவ்வாறிருப்பினும் எலினாவின் தந்தை கைது செய்யப்பட்ட பின்னர் அவளின் நலனில் அக்கறை எடுத்து கவனித்து வந்த குடும்ப நண்பரொருவர் அவள் பற்றி தெரிவிக்கையில்

புதிய சூழலுக்கு தன்னைத் தயார்படுத்த அவளுக்கு சிறிது காலம் எடுத்ததெனவும் தற்போது அவள் காப்பகத்தில் தனது நண்பர்களுடன் இனிதே பழகி வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஆளடையாளப் பத்திரங்கள் இன்மையால் பாடசாலைக்கு செல்ல முடியாமற் போன எலினாவுக்கு அநேகமான ஐந்து வயது சிறுவர் சிறுமியர் போலன்றி எழுதுவதில் போராட வேண்டியுள்ளது.

கடந்த ஜனவரியில் எக்ஸ்பிரஸ் தினசரி நிருபர் அவளை சந்தித்த போது அவளால் தனது பெயரை ஆங்கிலத்தில் அவசரமாக கிறுக்கி எழுதவே முடிந்த போதிலும், தனது வயதை ஒத்த அநேகமான சிறார்களை போலவே போஸ் கொடுப்பதிலும் குறும்புகள் செய்வதிலும் பிரியமுள்ளவளாகவே காணப்பட்டாள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :