இந்தியாவுக்கு எதிராக நல்ல தொடக்கம் அமைவது அவசியம் என அவுஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆடம் வோஜஸ் தெரிவித்துள்ளார்.
ஜார்ஜ் பெய்லி தலைமையிலான அவுஸ்திரேலிய அணி, ஒரு டி20 கிரிக்கெட் மற்றும் 7 ஒருநாள் ஆட்டங்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் கிளப்பில் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் 3 நாள் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 ஆட்டம் நாளை ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.
இந்தத் தொடர் குறித்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் வோஜஸ் கூறுகையில், நம்பர் 1 அணியுடன் நாங்கள் மோத உள்ளோம்.
இந்த போட்டித் தொடரில் நாங்கள் வெற்றிப் பெற்றால் அந்த இடத்தை அடையக்கூடிய வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கும். அதற்காக, நாங்கள் கடுமையாகப் போராடுவோம்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை அவர்களது சொந்த மண்ணிலேயே கைப்பற்றியது மிகப்பெரிய நம்பிக்கையை எங்களுக்கு அளித்துள்ளது.
தொடர்ந்து எங்களது அணியின் ஆட்டம் முன்னேற்றம் அடைந்து வருகிறது. இந்த போட்டித் தொடரில் முதல் ஆட்டம் சிறப்பாக அமைவது மிக அவசியம்.
இந்தியா போன்ற ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது கடினம். ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் போன்ற பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள சிறப்புத் திட்டங்களை வகுத்துள்ளோம்.
அவற்றை வெளிக்கொண்டு வருவோம், நாங்கள் எல்லா சவால்களுக்கும் தயாராக உள்ளோம்.
இந்திய ஆடுகளங்களில் வாட்சன், ஹாடின் ஆகியோர் பல போட்டிகளில் விளையாடி அனுபவம் பெற்றுள்ளனர். அவர்களுடைய அனுபவங்களை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இது எல்லா வீரர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
கடந்த 2009ம் இந்தியாவுக்கு எதிராக தொடரை கைப்பற்றியதை போன்று, இந்த ஆண்டும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ராஜ்கோட் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
மழை பெய்தாலும் மைதானத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மைதானப் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments :
Post a Comment