வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசம் முற்று முழுதாக பொலிஸாரின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதோடு இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான வீடியோக் காணொளிகள் கிடைக்கப் பெற்றுள்ளதோடு இதனூடாக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
வெலிவேரிய பிரதேசம் முழுமையாக பொலிஸாரின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதோடு பிரதேச மக்கள் வழமைபோன்று தமது அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தோடு பிரதேச மக்களுக்கான குடிநீர் வழங்கப்பட்டு வருவதோடு தொடர்ந்தும் இப்பகுதி மக்களுக்கான தூய குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இராணுவத்தினரின் பிடியில் இருந்து மக்கள் விடுவிக்கப்பட்டு சிவில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்களின் நிலைமையும் மாறியுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பிலான வீடியோக் காணொளிகளை பொலிஸார் பெற்றுள்ளதோடு அவற்றினை நீதிமன்றில் கையளிக்கப்படுவதோடு அவ்வீடியோக் காணொளிகளின் மூலமாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும்.
அத்தோடு வெலிவேரிய பிரதேசத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலை தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது. மேலும் சம்பவத்தில் இராணுவத்தினரின் ஆயுதங்கள் பலவற்றினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

0 comments :
Post a Comment