அரசாங்கம் எதிர்வரும் மாதங்களில் மூன்று மாகாண சபைகளின் தேர்தல்களை நடத்தவுள்ள அதேவேளை அதற்கு முன்னேற்பாடாக குறித்த மாகாணங்களில் 'தண்சல்" வழங்க ஆரம்பித்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அக் கட்சியின் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இராஜகிரியவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண சபை உட்பட மூன்று மாகாண சபைகளின் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி குறித்த மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட தயாராகவேயுள்ளது.
தேர்தல் சுதந்திரமாகவும் நீதியாகவும் இடம்பெறுவதற்கு ஏற்றவகையில் அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும். அரசாங்கம் தற்போதே தேர்தலுக்கு முன்னோடியாக 'தண்சல்" வழங்க ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக மூக்குக் கண்ணாடி மற்றும் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் போன்றவற்றை தேர்தல் இடம்பெறவுள்ள மாகாணசபைகளில் வழங்குகின்றது. அரச சொத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாக சர்வதேசத்தால் அவதானிக்கப்படுகின்றது. இந்நிலையில் வடக்கில் முதலாவதாக சிவில் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும். பொலிஸ் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை தேர்தலுக்கு முன் அரசாங்கம் உருவாக்க வேண்டும். சர்வதேச கண்காணிப்பாளர்களை அழைக்க வேண்டும்.
அவ்வாறில்லாது போனால் அரசாங்கம் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்
.

0 comments :
Post a Comment