
பொலிஸ் அழைப்பாணைக்கு பயந்து இளைஞன் ஒருவன் கிருமிநாசினி அருந்தி தற்கொலை செய்துள்ளான். இச்சம்பவம் மொனராகலைப் பகுதியில், தம்பகல்ல என்ற இடத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
தம்பகல்லையைச் சேர்ந்த 23 வயது நிரம்பிய இளைஞனே கிருமிநாசினி அருந்தி தற்கொலை செய்து கொண்டவராவார்.
இது பற்றி தெரியவருவது,
தம்பகல்லையைச் சேர்ந்த யுவதியொருவர் குறிப்பிட்ட இளைஞனால் தான் மூன்று மாதக் கர்ப்பிணியாக இருப்பதாகவும் தன்னை அவ்விளைஞன் திருமணம் செய்ய மறுப்பதாகவும் தம்பகல்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இம்முறைப்பாட்டினை விசாரணை செய்ய இளைஞனை பொலிஸ் நிலையம் வருமாறு பொலிஸ் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. இதற்குப் பயந்து அவ் இளைஞன் பொலிஸ் நிலையம் வருமாறு குறிப்பிட்ட தினத்தில் கிருமிநாசினி அருந்தியுள்ளான்.
உடனடியாக அவ்இளைஞன் தம்பகல்லை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் சிகிச்சை பலனின்றி மரணமானான். இது தொடர்பாக நடைபெற்ற மரண விசாரணையின்போது சாட்சியங்களிலிருந்து மேற்கண்ட விடயம் தெரியவந்துள்ளது.
இறுதியில் மரண விசாரணை அதிகாரி பி.எச்.கே. அப்புஹாமி பொலிஸ் நிலையம் சென்றால் தமக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமென்ற பயத்தினாலேயே கிருமிநாசினி அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளாரென்று தீர்ப்பு வழங்கினார்.
இதேவேளை குறித்த இளைஞனால் கர்ப்பமாகியுள்ளதாக கூறப்படும் பெண் உறவு முறையில் அவருக்கு சித்தி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment