
சவுதி அரேபியாவில் தாக்குதலுக்கு இலக்கான இலங்கைப் பணிப்பெண் ஒருவர் நாடு திரும்பியுள்ளார்.
நேற்று நாடு திரும்பிய அவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பணிப்பெண்ணின் உடலில் காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறியுள்ளார்.
இதேவேளை பெண் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் இலங்கையிலுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்திடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளர் மங்கள ரன்தெனிய கூறியுள்ளார்.
இந்த நிலையிலேயே திடீரென அவர் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை பணிப்பெண் வேலை செய்த வீட்டின் உரிமையாளரின் மனைவியும் மகள்மாரும் அவரை உடல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த வீட்டு உரிமையாளர் வேலை வாய்ப்பு முகவர் நிலையங்களுக்கோ அல்லது வேறு எந்தவொரு தரப்பினருக்கும் அறிவிக்காமல் இரகசியமான முறையில் பணிப்பெண்ணை இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளதாக பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அநுராதபுரம் நெலுக்குளம் பிரதேசத்திலிருந்து லெபனானில் தொழிலுக்காகச் சென்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் உயிரிழந்து 20 நாட்கள் கடந்துள்ள நிலையில் பூதவுடல் இதுவரை இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் லெபனானுக்கான இலங்கை தூதரகத்திடம் அறிக்கை கோரியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியம் அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment