மன்னார் பறப்பாங்கண்டல் றோ.க.த.க. பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும், தேவாலயம் கட்டுவதற்கான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
பறப்பாங்கண்டல் றோ.க.த.க. பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாடசாலை வளர்ச்சி சமூகம் என சுமார் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றிணைந்து, இன்று (07) காலை மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சந்தித்து இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.
தற்போது பறப்பாங்கண்டல் கிராமத்தில் 260 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் 200 குடும்பங்களின் கருத்துக்களுக்கு மாறான வகையில், குறித்த விளையாட்டு மைதானத்தில், கத்தோலிக்க தேவாலயம் ஒன்று கட்டுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன.
இது எங்களுக்கு பேரதிர்ச்சியையும், மாணவர்களின் கல்வியில் சரிவையும் ஏற்படுத்தி இருக்கின்றது. இது புனித கார் மேல் மாதா ஆலய சபையின் தன்னிச்சையான முடிவேயாகும்.
இக்காணியில் ஆலயம் அமைக்க வேண்டும் என எந்த பொதுக் கூட்டத்திலும் தீர்மானிக்கப்படவில்லை.
இவ் ஆலயம் கடந்த கால போர்ச் சூழலினால் சேதமாக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு ஆறாம் மாதம் நடைபெற்ற ஆலய சபை பொதுக் கூட்டத்தில், இருந்த இடத்திலேயே இவ் ஆலயத்தை கட்டுவதெனவும், குடும்பத்திற்கு 2000 ரூபாய் வழங்குவதெனவும் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
பெரும்பாலான மக்களுக்கு விருப்பமில்லாத வகையில் இந்த செயல் இடம்பெற்று வருகின்றது. எனவே குறித்த ஆலயம் ஏற்கனவே இருந்த இடத்தில் கட்டப்பட வேண்டும் எனவும், பாடசாலை மைதானத்தில் கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடபர்பாக பாடசாலை வளர்ச்சி சமூகம் என்ற பெயரில் மகஜர் ஒன்றும் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment