சிரேஷ்ட அமைச்சர் டி.யு.குணசேகரவை புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச் செயலாளர் சிறீதரன் ஆகியோர் சந்தித்து 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சடமூலத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளைத் தடுப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடியுள்ளனர். நேற்று (27) பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் புளொட் முக்கியஸ்தர் ராகவனும் பங்கேற்றிருந்தார்.
சுமார் 01 மணி 30 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது கருத்துரைத்த புளொட் தலைவர் சித்தார்த்தன் மற்றும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் சிறிதரன் ஆகியோர், 13ஆவது திருத்தம் தொடர்பாக இங்கிருக்கின்ற இடதுசாரி கட்சிகள் மற்றும் 13ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு எதிராக இயங்கக்கூடியவர்கள், மேலும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென்று அக்கறைப்படுகின்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கின்றவர்களைச் சந்தித்து உரையாடி வருகின்றோம். இதன் ஒரு கட்டமாகவே தங்களையும் சந்தித்து கலந்துரையாட வந்திருக்கின்றோம் என்பதைத் தெரிவித்தனர்.
13ஆவது திருத்தத்தினை மாற்றியமைக்கக் கூடாதென்பதில் அமைச்சர் டியூ குணசேகர தீவிரம் காட்டுகின்றமைக்கு தமிழ் மக்களின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டதுடன், 13ஆவது திருத்தத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கையினைத் தோற்கடிப்பதற்கான வழிமுறைகள் உபாயங்கள் தொடர்பிலும் அமைச்சருடன் மிகவும் ஆழமாக கலந்துரையாடினர்.
13ஆவது திருத்தத்தினை மாற்றும் நடவடிக்கைகளுக்கு அமைச்சர் காட்டிவரும் முழுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளைத் மேலும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டுமென்றும் அமைச்சரிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.
1987ஆம் ஆண்டு 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் அன்றைய ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியினால் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சியில் இல்லாது கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்துகொண்டு அதற்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் அமைச்சர் டியூ குணசேகர முக்கியமானவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment