பொத்துவில் கல்வி அதிகாரிகள் சிறை அடைப்பு.

பொத்துவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பொத்துவில் உப கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர், பொத்துவில் பாக்கியாவத்தை அல் - கலாம் முஸ்லிம் வித்தியாலய அதிபர் காரியாலயத்தினுள் சுமார் 04 மணி நேரம் அடைத்து வைக்கப்பட்ட சம்பமொன்று இன்று காலை இடம்பெற்றது.

பொத்துவில் பாக்கியாவத்தை அல் - கலாம் முஸ்லிம் வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பாடசாலையில் நிலவும் வளப்பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரிக்கை விடுக்கும் வகையில் - இன்று கவன ஈர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றது.


குறித்த பாடசாலையில் கற்கும் மாணவர்களின் பெற்றோர், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து பாடசாலைக்கு வெளியே பதாதைகளை ஏந்தியவாறு இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் அந்த இடத்துக்கு பொத்துவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.அஸீஸ் மற்றும் பொத்துவில் உப கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் என்.ஏ. வஹாப் ஆகியோர் வருகை தந்தனர்.


இதன்போது, மேற்படி இருவரையும் பாடசாலை அதிபரின் காரியாலயத்துக்குள் பலாத்காரமாகக் கொண்டு சென்ற கவன ஈர்ப்பாளர்கள் - அவர்கள் இருவரையும் உள்ளே வைத்து அதிபரின் காரியாலயத்தினைப் பூட்டிட்டதோடு, காரியாலயத்துக்கான மின்சாரத்தினையும் துண்டித்தனர்.


இவ்விடயமானது உடனடியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளின் உடனடியாகக் கொண்டுசெல்லப்பட்டது.


இதனையடுத்து, பொத்துவில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருடன் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, குறித்த பாடசாலைக்கு தற்போது தன்னால் சமூகமளிக்க முடியாதுள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் பொத்துவில் பாக்கியாவத்தை அல் கலாம் முஸ்லிம் வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் மற்றும் வளப் பற்றாக்குறைகளைத் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்ததோடு, இந்த உறுதி மொழியினை கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களிடம் தெரிவிக்குமாறும் கூறினார்.


மேற்படி உறுதிமொழியினை கவனஈர்ப்பாளர்களிடம் பொத்துவில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். இதனையடுத்து, கவன ஈர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டதோடு அடைத்து வைக்கப்பட்டிருந்த பொத்துவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பொத்துவில் உப கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் சுமார் 04 மணித்தியாலயங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.


அத்துடன் திங்கட்கிழமை வரை பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில்லை எனவும் பெற்றோர் தீர்மானித்துள்ளனர்.


பொத்துவில் பாக்கியாவத்தை அல் கலாம் முஸ்லிம் வித்தியாலயத்தில் 1,383 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இந்தப் பாடசாலைக்கு 57 ஆசிரியர்கள் தேவையாகவுள்ளபோதும் தற்போது 33 ஆசிரியர்களே உள்ளனர். அதாவது 24 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர்.


இதேவேளை, இந்தப் பாடசாலையின் அதிகமான வகுப்பறைகள் தகரக் கொட்டில்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று கல்வி வயத்தில் பொத்துவில் கல்விக் கோட்டத்திலேயே அதிகளவு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.TM
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :