(அகமட் எஸ். முகைடீன்)
சிங்கள தமிழ் புத்தாண்டை கொண்டாடும் அனைத்து சகோதர உள்ளங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டில் புரையோடிப்போய் இருந்த யுத்தம் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அவர்களின் பிரயத்தனத்தினால் முடிவுற்று அபிவிருத்தி அபிலாசைகளை நுகரும் இத்தறுவாயில் மலர்ந்துள்ள புத்தாண்டு இதயங்களிலும் இல்லங்களிலும் சாந்தி, சமாதானம், சுபீட்சம் என்பவற்றை ஏற்படுத்த வல்ல புதுவருடமாக அமைய அனைவரும் முனைப்புடன் செயற்படவேண்டும். புதுவருட பிறப்பில் நல்ல பல விடயங்களின் அங்குரார்ப்பண நாளாக அமைவது வழமை. அந்தவகையில் “பழையென கழிந்து புதியென புகுந்து” வாழ்வின் வெற்றிப்பாதை நோக்கி பயணிப்போமாக.
இன மத வேற்றுமைகளுக்கு அப்பால் ஒற்றுமையுடன் புத்தாண்டு கலாசார மற்றும் விநோத விளையாட்டுக்களில் மக்கள் பங்கு கொள்கின்றமை புத்தாண்டின் சிறப்பம்சம்மிக்க விடயமாக காணப்படுகின்றது. அந்தவகையில் இனங்களுக்கிடையே நல்லுறவை வளர்த்துக் கொள்வதற்கு ஒரு நல்ல தருணமாக இப்புதுவருட பிறப்பு அமையும் என நினைக்கின்றேன். தனி மனிதனில் ஏற்படுகின்ற மாற்றமே அவன் சார்ந்த சமூகத்தின் மாற்றமாக காணப்படுகின்றது.
அதன் பிரதிபலிப்பே நாட்டின் கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களில் தாக்கத்தை செலுத்துகிறது. எனவே நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்காது தத்தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த புதுவருட பிறப்போடு இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் தனக்குத் தானே உறுதி பூணவேண்டியுள்ளது.
சிங்கள தமிழ் புத்தாண்டின் பூரிப்பில் மூழ்கி உள்ள அனைவருக்கும் இன்பம் பொங்கி உவகைமிக்க உன்னத ஆண்டாக மிளிர மீண்டும் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment