சவூதி அரேபியாவில் மரணதண்டனை தீர்ப்பு நிறைவேற்றப்பட்ட இலங்கை பணிப்பெண்ணான ரிசானா நபீக்கின் வயது தொடர்பில் ஏற்பட்ட சிக்கல்களை தொடர்ந்து பணிப்பெண்ணாக வெளிநாடு செல்வோரின் வயதெல்லையில் மாற்றம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊழியர் நலனோம்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த ரிசானா நப்பீக் தொடர்பில் தெவட்டகஹ பள்ளிவாசலில் நடைபெற்ற விஷேட பிரார்த்தனை நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது பணிப்பெண்களின் நலன் பேணும் நடவடிக்கைகளை அமைச்சு முறையாக மேற்கொள்ளும். அமைச்சுப்பதவியை நான் ஏற்றபோது 18 வயதாக இருந்த பணிப்பெண்களுக்கான குறைந்த பட்ச வயதெல்லை 21 ஆக அதிகரிக்கப்பட்டது. இந் நிலையில் குறித்த வயதெல்லையை 25 ஆக அதிகரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுவருகிறது. பணிப்பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது மற்றும் அவர்களது பணி தொடர்பான விபரங்களிலும் கண்டிப்பான நடைமுறைகள் பின்பற்றப்படும் என தெரிவித்தார். ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு ஆகும் போது வெளிநாட்டுக்கு பணிப்பெண்களை அனுப்புவதை கலாசார மற்றும் சமூக சீர்கேடுகளை நிவர்த்தி செய்வதன் பொருட்டு 80 தொடக்கம் 90 வீதம் வரையில் குறைப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment