ஆதிப் அஹமட்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச்செயலாளரும்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீனின் வேண்டுகோளின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செய்ய்யித் அலி ஸாஹிர் மௌலானாவின் முயற்சியில் கம்பரெலிய கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 25 இலட்சம் ரூபா செலவில் புதிய காத்தான்குடி பதுரியா றிஸ்வி நகர் குறுக்கு வீதி மற்றும் பதுரியா றிஸ்வி நகர் முதலாம் குறுக்கு வீதி என்பன கொங்கிறீட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.பதுரியா றிஸ்வி நகர் குறுக்கு வீதிக்காக 15 இலட்சம் ரூபாவும்,பதுரியா றிஸ்வி நகர் முதலாம் குறுக்கு வீதிக்கு 10 இலட்சம் ரூபாவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வீதி அபிவிருத்தி தொடர்பிலான விடயங்களை கலந்தாலோசிக்கும் மக்கள் சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச்செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செய்ய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் பாராளுமன்ற செயலாளர் எஸ்.எம்.ஸப்றாஸ் ஆகியோர் கலந்து கொண்ட இந்த மக்கள் சந்திப்பில் வீதி அபிவிருத்திப்பணிகள் ஆரம்பிக்கப்பட முன்னராக குறித்த வீதியில் வசிக்கும் மக்கள் அவசியம் செய்து கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு கலந்துரையாடப்பட்டது.
இந்த மக்கள் சந்திப்பில் பதுரியா வட்டார ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் அமைப்பாளர் ஜஹானி,அப்பிரதேச கட்சி முக்கியஸ்தர் றியாஸ் உட்பட பொது மக்கள்,பெண்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மிக நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாத இந்த வீதிகளால் தாம் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வந்ததாகவும் மழை காலங்களிலும் மிக அதிகமான கஷ்டங்களை எதிர்நோக்கியதாகவும் இவ்வீதி அபிவிருத்திக்கு முயற்சிகளை மேற்கொண்டமைக்கு நன்றிகளை தெரிவிப்பதாக பொதுமக்கள் இதன்போது கருத்து தெரிவித்தனர்.