

மட்டக்களப்பு மாவட்டத்தின் உறுகாமம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வின்போது துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததாகக் கூறப்படும் இருவரை கரடியனாறு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் உறுகாமம் பிரதேசத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததாகக் கூறப்படும் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இவர்களிடமிருந்து மேற்படி துண்டுப் பிரசுரங்களை கைப்பற்றியுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். கரடியனாறு பொலிஸ் பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
உறுகாமம் பிரதேசத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இளைஞர்கள் சிலர் மேற்படி துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேக நபர்களை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
உறுகாமம் கிராமத்தில் இந்திய அரசின் வீட்டுத் திட்டமா? இஸ்லாமிய குடியேற்றத் திட்டமா? என்ற தலைப்பிடப்பட்டு உறுகாமம் வாழ் தமிழ் மக்கள் என குறிப்பிடப்பட்டு மேற்படி துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
மேற்படி துண்டுப்பிரசுரங்களில் 1990இல் உறுகாமத்திலிருந்து வெளியேறிய முழு முஸ்லிம் குடும்பங்களுக்கும் ஏறாவூர் சதாம் உசேன் கிராமத்தில் காணிகளும் வீடுகளும் வழங்கப்பட்டு விட்டன.
இன்று இந்திய அரசின் வீட்டுத் திட்டத்தில் பயன் பெறும் முஸ்லிம்கள் யார்? உறுகாமத்தில் தமிழர்களை மாத்திரமே அரசாங்கம் மீள்குடியேற்றம் செய்தது. முஸ்லிம்களை அல்ல. பாதிக்கப்பட்ட முழுத் தமிழர்களுக்கும் வீடுகளை வழங்குங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment