உயர்கல்வியைத் தொடரும் பொருளாதார வசதி குறைந்த மாணவர்களின் கல்விப் பயணத்தை தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மடிக்கணனிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் செய்திப் பிரிவு பிரதானி சி.பி.எம். ஷியாம், உலமா கட்சித் தலைவர் முபாரக் அப்துல் மஜீத், ஹஸ்மா அழகுக் கலை நிலையத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.என்.எப். ஹஸ்மா, ரிக்கா டிரேடர்ஸ் உரிமையாளர் ரிகாஸா மஸாஹிர் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
அத்துடன் தமிழன் பத்திரிகையின் இணை ஆசிரியர் ஏ.எம். ஜௌபர், சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் தமிழ் செய்திப் பிரிவின் முன்னாள் செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, சிரேஷ்ட ஊடகவியலாளர் ராதா மேத்தா, பௌண்டேசனின் பணிப்பாளர் மரியம், இணைப்பாளர்களான ஆகிப் மொஹமட் உள்ளிட்ட பலர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஹாஷிம் உமர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் புரவலருமான ஹாஷிம் உமர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிளிநொச்சியைச் சேர்ந்த ஏ. கார்த்திக்கா, மாவத்தகமவைச் சேர்ந்த என்.ஆர். நுஹா, மல்வானையைச் சேர்ந்த சீ.எச்.எப். பிக்ரா, கொச்சிக்கடையைச் சேர்ந்த எம்.எஸ்.எப். ரிமாஸா மற்றும் அநுராதபுரத்தைச் சேர்ந்த எஃப்.எம். பஸ்லான் ஆகியோருக்கு சிறப்பு அதிதிகளின் கரங்களால் மடிக்கணனிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதனுடன், சமூகப் பொறுப்புணர்வின் மற்றொரு வெளிப்பாடாக, நலிந்த ஊடகவியலாளர்களுக்கு கரம் கொடுக்கும் திட்டத்தின் கீழ் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். சத்தார் அவர்களுக்கு ரூபாய் 1 இலட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கை ஊடகத் துறையில் நீண்டகாலம் பணியாற்றியவர்களின் நலனில் பௌண்டேசன் காட்டிவரும் அக்கறையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
கல்வி மற்றும் மனிதாபிமானப் பணிகளில் முன்னோடி
ஹாஷிம் உமர் பௌண்டேசன் கடந்த பல ஆண்டுகளாக கல்வி, சமூக நலன் மற்றும் மனிதாபிமான சேவைகளில் தொடர்ச்சியாக பங்களித்து வருகிறது. குறிப்பாக பொருளாதார வசதியற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணனிகள், பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், கல்வி உதவித்தொகைகள், மருத்துவ உதவிகள், அவசர நிவாரணங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளை நாடு முழுவதும் முன்னெடுத்து வருகிறது.
இன்றைய தகவல் தொழில்நுட்ப காலத்தில் ஒரு மடிக்கணனி மாணவர்களின் கல்வியில் அத்தியாவசிய கருவியாக மாறியுள்ள நிலையில், அதனை வாங்க இயலாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த உதவித்திட்டம் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. பல மாணவர்கள் இந்த உதவியின் மூலம் தங்களது ஆய்வுகள், இணையவழிக் கற்றல் மற்றும் கல்வி நடவடிக்கைகளை எளிதாக முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
சமூகப் பொறுப்புணர்வை முன்னிறுத்தும் ஹாஷிம் உமர்
தொழில்முனைவோராக மட்டுமல்லாமல், சமூகத்தின் தேவைகளை உணர்ந்து செயல்படும் மனிதநேயவாதியாகவும் ஹாஷிம் உமர் பரவலாக அறியப்படுகிறார். கல்வி, ஊடகம், சுகாதாரம் மற்றும் சமூக நலன் ஆகிய துறைகளில் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வரும் அவர், "சமூகத்திற்கு திருப்பிக் கொடுப்பதே உண்மையான வெற்றி" என்ற கொள்கையுடன் தனது பௌண்டேசனின் ஊடாக பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும், ஊடகவியலாளர்களின் நலனுக்கும் ஒரே மேடையில் முக்கியத்துவம் அளித்த இந்த நிகழ்வு, ஹாஷிம் உமர் பௌண்டேசனின் மனிதாபிமானப் பணிகளுக்கான மேலும் ஒரு சிறப்பான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.






.jpg)


0 comments :
Post a Comment