ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்பதியுதீன் தெரிவித்துள்ளதாவது;
"இறைதூதர் இப்றாஹிமின் தியாகத்தை முழு சமூகத்துக்கும் மார்க்கமாக்கியிருக்கிறோம்" என்று புனித திருக்குர்ஆன் கூறுகிறது. ஏகத்துவ வேதங்களின் தந்தையாகப் போற்றப்படும் இறைதூதர் இப்றாஹிம், இவ்வுலகில் மிகப்பெரிய நாகரீகங்களை நிறுவிச் சென்றவர். புனித நகரங்களான ஜெரூசலத்திலும், மக்காவிலும் அவர் நிறுவிய நாகரீகங்கள், இன்று ஐயாயிரம் வருடங்கள் கடந்தும் உலகில் மேலோங்கி நிற்கின்றன.
யூத கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்களின் தந்தையான இறைதூதர் இப்றாஹிம் சத்திய இலட்சியத்துக்காக எதையும் செய்யத் துணிந்தவர். இதனால்தான், அல்லாஹ்வுக்காக தமது மகன் இஸ்மாயீலை அறுத்துப்பலியிடத் துணிந்தார். அரும்பெரும் அன்னாரது தியாகத்தை நினைவுறுத்தவும் நிலைநிறுத்தவும் உழ்ஹியா கடமையாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதங்களின் மகத்துவங்களை களங்கப்படுத்தவும் கேலிசெய்யவும் சிலர், முயன்றமை வேதனைக்குரியதே. இவ்விடயத்தில் அரசாங்கம் தலையிட்டு, புனித ஹஜ்ஜின் கடமைகளில் ஒன்றான உழ்ஹியாவைச் செய்வதற்கு வழிவகை செய்ததை நாம், பாராட்டுகிறோம்.
தந்தை மற்றும் தனயனுக்கிடையிலான உறவுகள் எப்படி அமைய வேண்டும் என்பதை இறைதூதர் இப்றாஹிமுக்கும் அவரது மகன் இஸ்மாயிலுக்குமிடையில் நடந்த சம்பாஷனைகள் சிறந்த உதாரணமாகும். இதுபோன்று பல படிப்பினைகள் இவரது நாகரீகத்தில் நிறைந்துள்ளன. புனித ஹஜ் யாத்திரைக்குச் சென்றுள்ள சகலரதும் நல்லமல்களை அல்லாஹ் பொருந்திக் கொள்ள பிரார்த்திக்கிறேன். இதுபோன்று முஸ்லிம்களாகிய நாம், இப்புனித பெருநாள் தினத்தில், நமது சமூகத்துக்காகவும் நாட்டின் சுபீட்சத்துக்காகவும் அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம். அதேபோன்று ஆப்ரஹாம் "உடன்படிக்கையின் கீழ், காசா மற்றும் இஸ்ரேல் பிரச்சினைகள் தீரவும் இறைவனிடம் மன்றாடுவோம்.

0 comments :
Post a Comment