திருமண வாழ்விற்கு தயாராகும் யுவதிகளுக்கான Life Bond (லைப் பொன்ட்) நிறுவனத்தின் 3 மாத வாழ்க்கைத் திறன் பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் வைபவம், குருநாகல் மாவட்டம் சியாம்பலாகஸ்டொட்டுவ பகுதியில் உள்ள அல் நூர் அரபிக் கல்லூரியில் சனிக்கிழமை (14.02.2026) சிறப்பாக நடைபெற்றது.
இந்த பயிற்சி நெறியின் மூலம், வாழ்க்கையை சீரான முறையில் நடத்துதல், கணவன் – மனைவியிடையே விட்டுக்கொடுப்பு, பரஸ்பர புரிந்துணர்வுடன் வாழ்தல், கணவனின் உறவினர்கள் (மாமா, மாமி, மதினி உள்ளிட்டோர்) உடன் நற்பண்புடன் பழகும் முறை, குடும்ப உறவுகளை சிறப்பாக கட்டியெழுப்பும் திறன்கள் ஆகிய பல்வேறு தலைப்புகளில், இத்துறையில் விசேட நிபுணத்துவம் பெற்ற விரிவுரையாளர்களால் விரிவுரைகள் வழங்கப்பட்டன.
Life Bond நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷேக் பக்ருதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முகாமையாளர் இர்ஷாத், ரைன்கோ பௌஸ் ஹாஜியார், நெஷ்ட் வெஸ்ட் அகடமி, அகதியா சம்மேளத்தின் தேசிய தலைவர் எம்.ஆர்.எம். சாருக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிரதம அதிதியாக கொலன்னாவை பள்ளித் தலைவர் மற்றும் வர்த்தகரான பைரூஸ் ஹாஜியார் அவர்களும், அவரது பாரியாரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். மேலும், அல் நூர் அரபிக் கல்லூரி அதிபர், பிரதியதிபர், சியாம்பலாகஸ்டொட்டுவ ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
ரைன்கோ பௌஸ் ஹாஜியாரின் அனுசரணையில், கடந்த 5 வருடங்களாக நாட்டின் பல பகுதிகளிலும் இத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment