பொத்துவில் பிரதேசத்தில் தனியார் கல்வி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று திங்கட்கிழமை பொத்துவில் பொது நூலகத்தில் நடைபெற்றது. பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம். முஷாரப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கல்வி, மார்க்கம், சுகாதாரம் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
பொத்துவில் கோட்டக் கல்வி அதிகாரி திரு. ஹம்சா, ஜம்இய்யதுல் உலமா சபை பொத்துவில் கிளைத் தலைவர் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் முகைதீன் பாவா மௌலவி, அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் சித்தீக், பொதுச் சுகாதார பரிசோதகர் பாரி ஆகியோர் கருத்துரைகள் வழங்கினர்.
மேலும், பொத்துவில் பிரதேச சபையின் ஆலோசகர் குழு உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், “துயர் துடைப்போம்” அமைப்பின் தலைவர் ஆதம் மன்சூர், தனியார் வகுப்பு உரிமையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கலந்துரையாடலின் போது கல்வித் தரத்தை மேம்படுத்தவும், மாணவர்களின் நலனை உறுதி செய்யவும் மாலை 6 மணிக்குப் பிறகு தனியார் வகுப்புகள் நடத்தப்படாதிருத்தல், போயா விடுமுறை தினங்களில் தனியார் வகுப்புகள் நடைபெறாதிருத்தல், அஹதியா மற்றும் அறநெறிப் பாடசாலைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தனியார் வகுப்புகளுக்கான நேர அட்டவணை திட்டமிடுதல், தவணை மற்றும் பிரதான பரீட்சை காலங்களில் இரவு நேர விளையாட்டுப் போட்டிகளைத் தடை செய்தல், எல்லைப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும், 40 புள்ளிகளுக்கு குறைவாக பெறும் மாணவர்களுக்கும் விசேட கல்வி செயற்திட்டங்கள் அறிமுகப்படுத்துதல், போட்டிப் பரீட்சைகளுக்கான தயாரிப்புகள் மற்றும் AI, IT தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கற்கை நெறிகளை பிரதேசத்தில் ஆரம்பித்தல் போன்ற தீர்மானங்கள் ஏற்கப்பட்டன
இத்தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், பொத்துவிலில் கல்வி துறையில் ஒழுங்கும் முன்னேற்றமும் ஏற்படும் எனக் கூட்டத்தில் நம்பிக்கை வெளியிடப்பட்டது. மேலும், அடுத்த கட்டமாக புதிய கல்வி மாற்றங்கள் தொடர்பான திட்ட முன்மொழிவுகளுடன் விரிவான இரண்டாம் கட்ட கலந்துரையாடல் விரைவில் நடத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment