தென்கிழக்கின் அடிநாதமாய், உயர்கல்வி நிறுவனங்களின் கோட்டையாய் திகழும் இயற்கை எழில் சூழ்ந்த அட்டாளைச்சேனை மண்ணில் 1983.08.21 ஆம் ஆண்டு, மர்ஹூம் முகம்மது இஸ்மாயில் மற்றும் பரீதா தம்பதிகளுக்கு நான்கு சகோதரர்களுடன் கனிஷ்ட புதல்வராக (அட்டாளைச்சேனை 01 ஆம் பிரிவு) பிறந்தார்.
தனது ஆரம்பக் கல்வியை அக்/அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை அக்/அக்கறைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியிலும் (தேசிய பாடசாலை) பெற்றார். பின்னர் களனி பல்கலைக்கழகத்தில் B.Sc. பட்டம், ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டம், திறந்த பல்கலைக்கழகத்தில் LLB பட்டம் பெற்றதுடன், சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணமும் செய்து கொண்டார். மேலும் LLM – சட்ட முதுமாணி பட்டத்தையும் பெற்றுள்ளார்.
தனது நிர்வாக சேவைப் பயணத்தில், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர், கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் பிரதி மாகாண பணிப்பாளர், ஏறாவூர் நகர சபையின் செயலாளர், கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளர், பொத்துவில் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர், முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் ஆகிய பல முக்கியப் பதவிகளை வகித்து சிறப்பாகச் சேவை புரிந்துள்ளார்.
குறிப்பாக, பொத்துவில் பிரதேச செயலாளராக பணியாற்றிய காலப்பகுதியில், சமூக பாதுகாப்பு சபையின் சிறுவர் ஓய்வூதிய திட்டத்திற்கு ஆட்சேர்ப்பு மேற்கொண்டு, தேசிய ரீதியில் பொத்துவில் பிரதேச செயலகம் முதல் இடத்தைப் பெறுவதற்கு தியாக உணர்வுடன் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது மூதூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமையாற்றி வரும் எம். ஐ. பிர்னாஸ் அவர்களின் நிர்வாகத் திறன், அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மை ஆகியன, மூதூர் மக்களின் அபிவிருத்தி மற்றும் நலனுக்காக இனிவரும் காலங்களிலும் பெரிதும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :
Post a Comment