அக்கரைப்பற்றில் சமூக நலன் மற்றும் அவசர உதவித் தேவைகளை கருத்தில் கொண்டு “பைத்துல்மால் நிதியம்” உருவாக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்துள்ளார்.
இந்நிதியம் உருவாக்கப்பட்டமை தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, இந்நல்ல முயற்சி உருவாக வேண்டும் என்ற எண்ணம் நீண்ட காலமாக இருந்ததாகவும், கொரோனா தொற்றின் முதல் முடக்கக் காலத்திலேயே இதனை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அப்போது அது நடைமுறைப்படுத்தப்பட முடியாமல் போனதாகவும் கூறினார். பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் ஏற்பட்ட அனர்த்தச் சூழ்நிலைகள் இந்நிதியத்தின் அவசியத்தை மேலும் வெளிப்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, இனி தாமதிக்கக் கூடாது என்ற தீர்மானத்துடன், கடந்த 03.01.2026 அன்று அக்கரைப்பற்று ஜும்மா பெரியபள்ளி வாசலில் நடைபெற்ற நிகழ்வின் போது “பைத்துல்மால் நிதியம்” அதிகாரபூர்வமாக உருவாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அரசியல் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால், ஒரு ஊர்ப் பிரஜையாகவும், மூத்த அரசியல்வாதியாகவும், மாநகர முதல்வராகவும் இதன் உருவாக்கத்தை ஆரம்பித்து வைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், வருங்கால சந்ததிகள் இந்நிதியத்தின் பலனை முழுமையாக அடைய வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாகும் என்றார்.
மேலும், தனிநபர் ஆதிக்கம் தவிர்க்கப்பட்டு, கண்ணியத்துக்குரிய உலமாக்களின் வழிகாட்டலுடன், ஊரில் உள்ள மூத்த பள்ளிவாசல்களின் தலைமையில், ஏனைய அனைத்து நிறுவனங்களின் பதவி நிலை உறுப்பினர்களையும் இணைத்து இந்நிதியத்தின் நிர்வாகம் அமைக்கப்பட்டமை முக்கிய சிறப்பம்சமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் வேற்றுமைகளை மறந்து, “ஊர்” என்ற ஒரே நோக்கத்திற்காகவும், சமூகத்திற்காகவும், நாட்டிற்காகவும் அனைவரும் சுதந்திரமாகவும் பொறுப்புடனும் செயற்படுவார்கள் என்ற திண்ணமான நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் மாநகர முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லா மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment