குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்த 18ம் ஆண்டு ஐம்பெரும் மீலாது விழாவையொட்டி குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு கிராஅத், சூரா, ஹதீஸ், துஆ, திக்ரு, பாங்கு (அதான்), அஸ்மாவுல் ஹுஸ்னா, நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, இறைத்தூதர்கள் பெயர்கள், பேச்சு, கட்டுரை, கடிதம், கவிதை மற்றும் பாட்டு என 14 போட்டிகள் நடத்தப்பட்டன.
ஏராளமான ஆண்களும், பெண்களும், மாணவ, மாணவியரும் வயது வித்தியாசமின்றி இப்போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர். குவைத் வாழ் தமிழ் ஆலிம் பெருமக்கள் நடுவர்களாக செயலாற்றி வெற்றியார்களை தேர்ந்தெடுத்தனர். ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்றிடங்கள் மற்றும் சிறப்பு ஆறுதல் பரிசுகள் என நூறு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்ககப்பட்டனர்.
சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ அவர்களின் தலைமையில் சனிக்கிழமை (நவம்பர் 5, 2022) அன்று கைத்தான் தமிழ் பள்ளிவாசலில் நடைபெற்ற 18ம் ஆண்டு ஐம்பெரும் மீலாது நிறைவு விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் & அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. அனைத்து நிகழ்ச்சிகளையும் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ ஒருங்கிணைப்பு செய்தார்.
தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களான மவ்லவீ ஹாஃபிழ் அல்ஹாஜ் எஸ்.எஸ் ஹைதர் அலி மிஸ்பாஹி (முதல்வர், உஸ்மானிய்யா அரபிக் கல்லூரி & தலைவர், மஜ்லிஸுல் உலமா சபை, மேலப்பாளையம், திருநெல்வேலி) மற்றும் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் முனைவர் மு. சதீதுத்தீன் ஃபாஜில் பாகவீ M.A., M.Phil., Ph.D., (தலைமை இமாம், குராஸானி பீர் பள்ளிவாசல் & முதல்வர், ஜாமிஆ அல்ஹுதா அரபிக் கல்லூரி, அடையார், சென்னை மற்றும் உறுப்பினர், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி, தமிழ்நாடு அரசு) ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
0 comments :
Post a Comment