இந்த போராட்டம் ஆட்சியாளர்களின் பல தடைகளையும், இடையூறுகளையும், அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மற்றும் மழை, வெயில் என இயற்கையின் இடையூறுகளுக்கு மத்தியிலும் தொடரப்பட்டு இறுதியில் கடந்த 09.07.2022 இல் ஜனாதிபதி மாளிகை போராளிகளினால் கைப்பற்றப்பட்டு பின்பு ஜனாதிபதி கோட்டா நாட்டை விட்டு தப்பித்து ஓடும் வெற்றி நிலையை அடைந்தது.
இந்த போராட்டம் ஆரம்பத்தில் சில இளைஞர்களினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், நாட்கள் செல்லச்செல்ல போராளிகளின் எண்ணிக்கை பெருகியதுடன் நாடு முழுவதிலும் மக்களின் ஆதரவும், எழுச்சியும் அதிகரித்தது.
இந்த போராட்டத்துக்கு மக்களின் ஆதரவு அதிகரிப்பதனை உணர்ந்ததும், அதிகாரத்தில் இல்லாத அரசியல் கட்சிகள் தங்களது ஆதரவினை வழங்க முன்வந்ததுடன், சில அடிப்படை உதவிகளை செய்தனர்.
இந்த போராட்டத்தில் பிரதானமாக அனுரகுமார திஸ்ஸாநாயக தலைமையிலான JVP மிக முக்கிய பாத்திரம் வகித்ததனை எவராலும் மறந்துவிட முடியாது.
ஆனாலும் இந்த “அரகலய” போராட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் பாத்திரமும், பங்களிப்பும் மிக மிகப் பிரதானமானது. அதாவது காலிமுகத்திடலில் மாத்திரம் அவர்கள் தங்களது போராட்டத்தை மட்டுப்படுத்தாமல், நாடு முழுவதும் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் சென்று ஆங்காங்கே தங்களது போராட்டத்தினை மேற்கொண்டார்கள்.
இவ்வாறு போராட்டம் நடாத்தியதன் காரணமாக நாடு முழுவதிலும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் எழுச்சி ஏற்பட்டு ராஜபக்ச குடும்பத்துக்கு சிங்கள பிரதேசங்களின் எந்த இடத்திலும் வசிக்க முடியாத பாதுகாப்பற்ற நிலை உருவானது.
அத்துடன் அனைத்து பல்கலைக்கழக சம்மேளன மாணவர்கள் தங்களது போராட்டத்துக்கு தேவையான நிதியை நாட்டில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழக மாணவர்கள் ஊடாக அந்தந்த பிரதேசங்களில் வெளிப்படையாகவே நிதி வசூலித்தனர்.
இந்த போராட்டத்தில் அரசியல் கட்சி சார்ந்தவர்களுக்கு தங்களது கட்சி சார்பு எதிர்பார்ப்புக்களும், சுயநலங்களும் இருந்திருந்திருக்கலாம். ஆனால் அனைத்து பல்கலைக்கழக சம்மேளன மாணவர்களுக்கு நாட்டு நலன், மக்கள் நலன் என்ற தூய எண்ணத்தைவிட வேறு எந்த சுயநலன்களும் இருந்திருக்கவில்லை என்பதனை அவர்களது செயற்பாடுகள் மூலம் அறிந்துகொண்டோம்.
இவர்களை விலைக்கு வாங்குவதற்கு பல சக்திகள் அவ்வப்போது தொடர்ந்து முயற்சிக்காமலில்லை. ஆனால் எந்த அற்ப சுகங்களுக்கும், சலுகைகளுக்கும் விலை போகாமல் இறுதி இலக்கை அடையும் வரைக்கும் தொடர்ந்து போராடி இலக்கை அடைவைத்தற்காக தங்களால் முடியுமான தியாகங்களை செய்த அனைத்து பல்கலைக்கழக சம்மேளன மாணாவர்களுக்கு நாங்கள் முதன்மை நன்றிகளை கூற கடமைப்பட்டுள்ளோம்.
அவர்களிடம் தூய எண்ணங்கள் இல்லாமல் அரசியல் கட்சிகளின் பிடிக்குள் அகப்பட்டு சலுகைகளுக்கு சோரம் போயிருந்தால், இன்று “அரகலய” வின் போராட்டம் இலக்கை அடையாமல் தோல்வியடைந்திருக்கும். தொடர்ந்து கோட்டாவே ஜனாதிபதியாக இருந்திருப்பார் என்பதனை நாங்கள் மறந்துவிடக்கூடாது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
0 comments :
Post a Comment