பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் பெருநாள் வாழ்த்து செய்தி!



ப்ராஹீம் நபி வழி நின்று அநீதி மற்றும் அச்சுறுத்தலுக்கு எதிராக நெஞ்சுரத்தோடு உறுதியாக பயணித்து வெற்றி பெறுவோம்! - பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் பெருநாள் வாழ்த்து செய்தி!

தியாகத் திருநாளை மீண்டும் ஒருமுறை நாம் அடைந்திருக்கின்றோம். இந்த சந்தோசமான தருணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நெருக்கடிகளும், அச்சுறுத்தல்களும், அவமானங்களும், அநீதிகளும் தொடர்கதையாகிப் போன இச்சூழலில் மனித சமூகத்தின் வெற்றிக்கும், விடுதலைக்கும் தன்னையும், தன் குடும்பத்தினரையும் தியாகத்திற்கு தயார்படுத்தி இறைவனின் (கலீல்) நண்பர் என்கிற நிலையை அடைந்த இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்வு நமக்கு சிறந்த வழிகாட்டியாக அமைய வேண்டும்.
இந்நாளின் பெயர் முதற்கொண்டு ஹஜ்ஜின் ஓவ்வொரு கிரியைகளும் ஒவ்வொரு இறைவழிபாடுகளும், அன்னாரின் தியாகத்தை நினைவு கூறுகின்றது. வெறும் சடங்குகளாக அவற்றை அணுகாமல் நமது வாழ்வின் ஒவ்வொரு சவால்களுக்கும் தீர்வாக எடுத்துக் கொண்டு நாம் செயலாற்ற வேண்டும்.
மிகவும் நெருக்கடியான சூழலில் இந்தியாவும், இந்திய முஸ்லிம்களும் பல இன்னல்களை சமீப காலமாக சந்தித்து வருகின்றனர். இந்நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் மக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறித்து, நீதியை மறுத்து, அநீதியின் கூடாரமாக செயல்பட்டு வருகின்றார்கள். மிகச் சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் சர்வாதிகாரி நம்ரூத் போன்று செயல்படுகின்றனர்.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு என்று ஒற்றை கலச்சாரத்தை முன்வைத்து மக்களின் உரிமைகளில் தலையிடும் ஆட்சியாளர்களின் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்திடும் யாவரும் குறிவைக்கப்படுகின்றார்கள். உண்மைக்காகவும், உரிமைக்காகவும், நீதிக்காகவும் போராடுபவர்களுக்கு எதிராக வன்முறைகளும், வழக்குகளும், சிறைகளும் அரச பயங்கரவாதமும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இவ்வாறான அநீதிகளுக்கு எதிராக போராடுபவர்கள் நெஞ்சுரத்தோடு, உறுதியோடு, நிலைகுலையாமல் நின்று செயல்படுவதற்கு இப்ராஹீம் நபி அவர்களின் வாழ்வில் முன்மாதிரிகளும், பாடங்களும் ஏராளம் உண்டு. நெருப்புக் குண்டத்திற்கு முன் நிறுத்தப்பட்ட நிலையிலும் அவர்களின் உறுதியை அசைக்க முடியவில்லை என்ற அவர்களின் வரலாறு இன்று நமக்கு பல பாடங்களை கற்றுக் கொடுக்கின்றது.

ஒவ்வொரு பிரச்சனைகளையும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி பகுத்தறிவின் தந்தையாக செயல்பட்டு அதற்கான தீர்வுகளையும், திட்டங்களையும் முன்னெடுத்து செல்லும்போது பின்வாங்காமல் உறுதியுடனும், துணிவுடனும் செயல்பட்ட அவர்களின் நெஞ்சுரம் நமக்கு இன்று 'வழி' காட்டிட வேண்டும். இறைவனின் கட்டளைக்கு சிறு மறுப்பேதுமின்றி தன் மகனையே தியாகம் செய்யத் துணிந்த அன்னாரின் துணிவு நாம் பின்பற்ற வேண்டிய பாடங்களாக வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கின்றது. இன்று தனி மனித வாழ்வு துவங்கி ஒட்டு மொத்த நாடும் அமைதியற்ற நிலையிலும், அச்சத்தோடும் இருக்கின்றது. இந்நிலையினை மாற்றி, நீதிக்கும் அமைதியான வாழ்வுக்கும் குரல் கொடுத்திட வேண்டிய பொது சமூகத்தில் மயான மௌனம் நிலவி வருகின்றது.
இத்தகைய மௌனத்தை உடைத்து தீய சக்திகளுக்கு எதிராக மக்களை அணி திரட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கின்றது. இப்ராஹீம் நபியை சொந்தம் கொண்டாடக் கூடிய நாம் இத்தகைய பாரிய பொறுப்பை ஏற்றுக் கொண்டு, இப்ராஹீம் நபி அவர்களின் தியாகம், அன்னாரின் குடும்பத்தாரின் சகிப்புத்தன்மை ஆகியவற்றை நமது முன்மாதிரியாக கொண்டு சமகால நம்ரூதுகளையும், அவர்களின் கொள்கைகளையும் வீழ்த்த இப்பெருநாளில் உறுதி ஏற்போம். பெருநாளில் நாம் எழுப்பும் 'அல்லாஹ் அக்பர்' என்ற முழக்கத்தினை சாதாரண முழக்கமாக பாவிக்காமல் அது சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவத்தை வென்றெடுத்து மனித குலத்திற்கு எதிரான அநியாயங்களை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்றும் ஆற்றலாக முன்னிருத்துவோம்.
அதற்கான உறுதியை இந்நாளில் ஏற்றுக் கொள்ள நாம் அனைவரும் முன் வரவேண்டும் என்று கூறி மீண்டும் ஒரு முறை இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துக்களை பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு

M. முஹம்மது சேக் அன்சாரி
மாநில தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :