தெரிவு செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்கள் 200 பேர் வவுனியாவில் இருந்து புகையிரதம் மூலமாக தலைமைத்துவ மேம்பாட்டுக்கான தேசிய மையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்நாட்டின் பல்கலைக்கழக வரலாற்றில் முதலாவது சமூக நல்லிணக்க மையம் வவுனியா பல்கலைக்கழகத்தில்தான் அமைக்கப்பட்டு உள்ளது.
அதே போல தலைமைத்துவ மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் 35 வருட கால வரலாற்றில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி வழங்கப்படுகின்ற முதலாவது சந்தர்ப்பமும் இதுவே ஆகும்.
மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகித்த கால பகுதியில் சமூக நல்லிணக்க விவகாரத்துக்கான செயலாளராக விளங்கியவர் பேராசிரியர் நந்தன சாந்தி விஜயசிங்க.
இவருடைய சிந்தனையில்தான் வவுனியா பல்கலைக்கழகத்தில் சமூக நல்லிணக்க மையம் உருவாக்கப்பட்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவால் கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது.
அதே போல இன்றைய பல்கலைக்கழக மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்கிற தொனி பொருளிலான இப்பயிற்சி முகாமும் இவருடைய சிந்தனையில் உதயமாகி இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் கூட்டு பங்களிப்புடன் முன்னெடுக்கப்படுகின்றது.
சம்பிரதாயபூர்வ ஆரம்ப விழாவில் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் அனுராத விஜயகோன், பல்கலைக்கழக மானிய ஆணை குழுவின் சமூக நல்லிணக்க விடயங்களுக்கான தலைவர், தலைமைத்துவ மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் பணிப்பாளர் ஏ. பி. எம். அஷ்ரப் உள்ளிட்ட பேராளர்கள் கலந்து கொண்டு மங்கள விளக்கேற்றி உரையாற்றினார்கள்.
வவுனியா பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி ரி. மங்களேஸ்வரன் இணைய வழி தொழினுட்பம் மூலமாக சிறப்புரை ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment