நாட்டில் பால்மா, சீனி, எரிவாயு மற்றும் பல்வேறு அத்தியவசியப் பொருட்களின் விலை உயர்வடைந்தும், சில அத்தியாவசியப் பொருட்கள் சந்தையில் இல்லாத நிலையிலும், மினுவாங்கொடை லங்கா சதொசவில் நேற்று (01) புதன்கிழமை, ஒரு கிலோ சீனி 120 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பால்மா உட்பட மேலும் சில பால்மா வகைகளின் விற்பனையும் இடம் பெற்றதால், மக்கள் வெள்ளம் லங்கா சதொசவில் குவிந்திருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.
அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்ய, மக்கள் ஆர்வத்துடன் விற்பனை நிலையத்தை நோக்கி வந்தாலும், நாட்டின் கொரோனா சூழ்நிலை காரணமாக மக்களைக் கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிக்கல் நிலை தோன்றியதாக, மினுவாங்கொடை லங்கா சதொச முகாமையாளர் தெரிவித்தார்.
நாட்டின் நடுத்தர வர்க்கம் முதல் உயர்தர வர்க்கம் வரை கொரோனா அலையில் பொருளாதாரப் பாதிப்பைச் சந்தித்திருக்கும் இந்தச் சூழ்நிலையில், தற்போதைய விலையேற்றம் பாரிய சங்கடத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதுடன், வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்கள் பலதும் பசியுடன் நாட்களைக் கடத்தும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
அரசாங்கம் மற்றும் உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் கரிசனை செலுத்தி, அத்தியவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

0 comments :
Post a Comment