போதைக்குள் புதையப்போகும் எம்சமூகம்! இரு சகோதரர்களின் உள்ளக்குமுறல்!!



எல்லாவற்றையும் மூடிவிட்டு ஊரே கூடி ஆராய வேண்டிய விடயம்!

//நேற்றைய தினம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 25 வயது இளைஞனிடம் இருந்து 100 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 590 போதை மாத்திரைகளுடன் கைதாகியுள்ளதாக அறிய முடிகிறது.
குறித்த இளைஞர் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாவும் சொல்லப்படுகிறது//
இது குறித்து பல கேள்விகள் தொக்கி நிற்கிறது
1. இந்த 590 மாத்திரைகளை இந்த இளைஞனிடம் விற்பதற்கு கொடுத்த கயவன், பிரதான சூத்திரதாரி யார்?
2. எங்கிருந்து இது வினியோகம் செய்யப்பட்டுகிறது?
3. இதனை பாவிக்கும் போதைக்கு அடிமையான அப்பாவிகள் யார்?
4. இந்த பாவனையால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஏன் இன்னும் அறிவூட்டப்படாமல் இருக்கின்றனர்?
5. யார் யாரெல்லாம் இந்த வியாபாரத்தில் தொடர்பில் உள்ளனர்?
6. இது தனிப்பட்ட குற்றமா சமூக குற்றமா?
இது போன்ற பல நூறு கேள்விக்கு பதில் தேடினால் ஊரை பற்றி பிழையாக பேசுவதாக கூறி சிலர் ஒழித்து மறைக்க முயற்சி எடுக்கின்றனர்.
இது மறைத்து கள்ளத்தனமாக செய்யப்படுகிற தொழில் தான், அதனாலே அவர்கள் மறைக்க கோருகிறார்கள் என நினைக்கிறேன்.
இந்த வியாபாரம் நமது பிரதேசம் முழுவதும் பரந்துள்ளதாகவே அறிய முடிகிறது. ஆனால் நம்மில் சிலர் இது குறித்த விழிப்புணர்வு பதிவுகளின் போது அது நமது பிரதேசமா எனது குறிச்சியா என்ற பிறவி வாதம் முன்வைத்து உரிய கருத்த மக்களிடம் கொண்டு சேர்க்க தடைக் கல்லாகவும் இருக்கின்றனர்.
நமது பிரதேசம் என்றால் என்ன அயல் பிரதேசம் என்றால் என்ன? இங்கே பாதிக்கப்படுவது நமது சமூகத்தின் ஒருவனே என்பதை ஜீரணித்து அதற்கு பரிகாரம் தேடி நலிவுறப்போகும் நமது சமூகத்தினை பாதுகாக்க களப் பணி அவசியமாகிறது.
இந்த பாதிப்பின் வலியை வேதனையை, பெற்றோர் படும் அவஸ்தையை இவர்கள் நேரடியாக அனுபவிக்கும் வரை தாமதித்தால், விபரீதம் வீட்டு வாசலில் வந்து நிற்கும்.
எனவே ஊர் ஒட்டுமொத்தமாக கூடி ஏனைய எல்லா விடயங்களையும் ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு பொலிசாருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி உரியவர்களை இனங்கண்டு புத்திசாலித்தனமாக அறிவூட்டப்பட வேண்டும்.
மீண்டும் பதிவு செய்கிறேன்
//புத்திசாலித்தனமாக அறிவூட்டப்பட வேண்டும்.//
விபச்சாரத்திற்கு வித்திடமுதல் விழிப்புணர்வு பெறுங்கள்.
உங்களை பாதுகாக்கும் முன் உங்கள் அயலவனை பாதுகாருங்கள். அவனை பாதுகாப்பதன் மூலமே நீங்கள் பாதுகாக்கப் படுவீர்கள்.
இந்த சமூகத்தில் எங்கோ கடைக்கோடியில் இருப்பவன் இதனால் பாதிக்கப்பட்டாலும் அவனும் நமது அங்கமே. அவனை மீட்கும் பொறுப்பில் நாம் அனைவரும் உள்ளோம்.

கலீல் சீனிமுகம்மட்


"கல்முனைக்குடி கிறீன்பீல்ட் வீட்டு தொடர்மாடியில் ஹெரோயினுடன் தந்தையும் மகனும் கைது"
"கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது"
"மருதமுனையில் போதைப் பொருளுடன் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கைது"
இவ்வாறான செய்திகள் நமது பிரதேசம் மிகுந்த ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதை வெளிப்படுத்துகின்றன.
இவ்வூர் பள்ளி நிருவாகங்கள், உலமாக்கள், ஊர் முக்கியஸ்தர்கள் அனைவரும் நேருக்கு நேர் ஒரே நேரத்தில் சந்தித்துப் பேசி போதை வியாபாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்காவிட்டால் நமது வீட்டிலும் போதையின் வாடை வந்தடையலாம்.
போதை வியாபாரத்தில் ஈடுபடுவோர் வெள்ளை ஆடை அணிந்து நமது கண் முன்னேயே வலம் வருபவர்களாகவும் இருக்கலாம்.
விரைந்து நடவடிக்கை எடுக்காது விட்டால் கைசேதம் அனைவருக்குமே.
 
எம்.ஐ.சர்ஜூன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :