சாணாகியனின் போக்கு முஸ்லிம்கள் மத்தியில் விமர்சனத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.-யஹ்யாகான்



ண்மைக்காலமாக பாராளமன்ற உறுப்பினர் சாணாக்கியன் பாராளமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பாராளமன்ற உறுப்பினர் ஹரீஸ் உள்ளிட்ட முஸ்லிம் பாராளமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலும் கல்முனை நகர் விடயமாகவும் வெளியிடும் கருத்துக்கள் முஸ்லிம்கள் மத்தியில் விமர்சனத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் தொழிலதிபருமான ஏ.சி.யஹ்யாகான் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

காலம் காலமாக இலங்கையில் விசேடமாக கல்முனையில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையே சிறந்த புரிந்துணர்வே இருந்து வருகின்றது. அந்த அடிப்படையில் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் தமிழ் மக்களுடன் ஒன்றிணைந்து குடியிருந்ததையும் அவர்களுடனே தனது அரசியல் பிரவேசத்தை மேற்கொண்டதையும் குறிப்பிட முடியும். அத்துடன் தற்போதைய தலைவர் றவூப் ஹக்கீம், தமிழ் கூட்மைப்பின் தலைவர் சம்மந்தன் மற்றும் சுமந்திரன் போன்றோருடன் சிறந்த புரிந்துணர்வைப் பேணி வருவதை உலகமே அறியும்.
எனது தகப்பானார் கூட வேல்முருகு என்ற தமிழ் சகோதரருக்காக தனது வீட்டில் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட வரலாறும் இருக்கின்றது. கடந்த காலங்களில் கல்முனை அரசியலில் கோலோட்சிய முஸ்லிம் அரசியல் பெரும்தகைகள் தமிழர்களை ஒதுக்கிவிட்டு முஸ்லிம்களுக்கு விசேடமாக எதனையும் செய்யவில்லை. அவர்கள் எல்லோரையும் அரவணைத்தே சென்றனர்.
மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களது பாசறையில் வளர்ந்த ஹரீஸும் அதனையே இப்போதும் செய்து வருகின்றார். இப்படியான சூழலில் கல்முனை மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க, காலத்துக்குக் காலம் சாணாக்கியர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். இவைகளை இங்கு வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் நன்கு அறிவர்.
இப்போது எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலை இலக்காக வைத்து கல்முனையில்; சிலர் தங்களது கோர முகங்களை காட்ட முனைகின்றனர். இந்த விடயத்தில் தமிழ் மக்களும் இங்கு வாழும் முஸ்லிம்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
சிலர் கல்முனையில் என்ன நடந்தது? அங்கு உண்மையாக என்ன பிரச்சினை இருக்கிறது என அறியாது; மூளைக்கும் முன்னானுக்கும் தொடர்பில்லாத கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

கல்முனையின் உள்ளே நுழைந்து பார்த்தால் நன்றாகப்புரியும் இங்கு எவ்வித பாரபட்சமும் இல்லாது சமனான அடிப்படையில் அபிவிருத்திகள் பகிரப்பட்டுள்ளன என்று. நிலைமை இவ்வாறு இருக்க தாங்களது வாக்கு வங்கியை உயர்த்திக்கொள்வதற்காக இனவாதத்தையும் பிரதேசவாதத்தையும் கூறி இங்குள்ள தமிழ் முஸ்லிம் உறவை சீர்குலைக்க சாணாக்கியன் போன்றோர் கூப்பாடு போடுகின்றனர்.

யார் கூத்தாடினாலும் கூப்பாடு போட்டாலும் எங்களுடைய பாராளமன்ற உறுப்பினர் ஹரீஸுடைய அனுபவம் உங்களுக்குக் கிடையாது. அவரைப்பற்றிப் பேசுவதற்கும் எவருக்கும் அருகதை கிடையாது. ஏதாவது ஒன்றை பேசிவிட்டு சம்மந்தன் போன்ற அரசியல் முதிசங்களின் இடத்தைப் பிடித்துவிடலாம் என நினைத்துக்கொண்டு அந்த தலைவருக்கு நிகராக பேசுவதுபோல் இப்போது சாணக்கியன் பேச முற்படுகிறார். அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்றும் வேறு கட்சிகள் என்றும் தாவித் திரிந்து விட்டு இப்போது தமிழ் மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்.

அண்மையில் இவர்கள் தமிழ்பேசும் மக்களுக்காக என்று கூறிக்கொண்டு முன்னெடுத்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நடைபவனி போராட்டத்துக்கு எங்களது முஸ்லிம் மக்களையும் ஆதரவு தருமாறு கோரியிருந்தோம். அதன்படி கணிசமான முஸ்லிம் மக்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இங்கு சணாகியன் என்ற நபரை சமூக ஒற்றுமைக்கு ஒரு உதாரணமாகப் பார்த்தோம். இப்போது அவரது உண்மையான முகத்தை மக்கள் அறிந்து விட்டனர்.

இப்போது அவர் கல்முனையைத் துண்டாட வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார் கல்முனை என்பது யாருடைய அப்பன் வீட்டுச் சொத்தும் அல்ல; கண்டவன் எல்லான் கல்முனையை துண்டாட.

இலங்கை முஸ்லிம்கள் விடயத்தில் அவர்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது இங்குள்ள முஸ்லிம் பாராளமன்ற உறுப்பினர்கள் யாரையும் சந்தித்து தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். அவர்கள் எவரது அனுசரனையையும் பெறத் தேவையில்லை.
ஹரீஸ் உள்ளிட்ட முஸ்லிம் பாராளமன்ற உறுப்பினர்கள் கிழக்கில் சிங்கள முதலமைச்சர் ஒருவரை கொண்டுவர உள் ஒப்பந்தம் ஒன்றை செய்துவிட்டு செயற்படுவதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டு ஒன்றையும் முன்வைத்துள்ளார். இவ்வாறானதொரு ஒப்பந்தம் எதுவும் இல்லை என்பதை நான் ஆணித்தரமாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
கல்முனை என்பது பலநூற்றாண்டு காலமாக முஸ்லிம்களின் ஒரு முகவேற்றிளையாக இருந்து வந்துள்ளது.எங்களுக்குள் உள்ள ஒருசிலரும் இந்த சாணக்கியனின் மகுடிக்கு ஆடிக்கொண்டு ஹரீஸ் போன்ற பாராளமன்ற உறுப்பினர்களை விமர்சிப்பது ஆச்சரியத்தைத் தருகின்றது.

தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையிலான விரிசலை ஏற்படுத்தி அரசியல் குளிர்காய்வதை சாணாக்கியன் போன்றோர் நிறுத்திக்கொள்ள வேண்டும். சாணக்கியனின் தற்போதைய நடுநிலையற்றபோக்கை எவரும் ஏற்கப்போவதில்லை.
கல்முனை RDH அலுவலகம் முஸ்லிம் மக்களுக்காக மாத்திரம் உருவாக்கப்பட்டது என்ற ஆதாரமற்ற கருத்துக்களையும் சாணக்கியன் திணிக்கக் முற்படுகிறார். இங்குதான் சாணக்கியனின் அடி சறுக்குகிறது.
இவர் எடுத்துக் கொண்ட உதாரணம் எந்த அடிப்படையும் அற்றது என்பதை மிகவும் காட்டமாக தெரிவிக்கிறேன்.

இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸுக்கு அந்த மக்கள் ஏன் கடந்த காலங்களில் வாக்களித்தார்கள் என்ற கேள்விக்கும்; அதேபோல் இருபதாம் திருத்தத்தை ஏன் ஆதரித்தார் என்பதற்கான பூரண தெளிவையும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் உரை தெளிவுபடுத்தி நிற்கிறது.

ஹரீஸ் பாராளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டால் அதேபோல் இந்த அரசுக்கு ஆதரவாக இருக்காது போயிருந்தால் ஒரே இரவில் கல்முனை பறிபோகும் என்கிற அச்ச நிலையை உறுதிப்படுத்தியுள்ளார் திரு சாணக்கியன்.

குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இருபதாம் திருத்தத்தை ஆதரித்ததில் நியாயம் இருக்கிறது என்ற எண்ணப்பாட்டிற்கு சாணக்கியனின் உரைகள் மேலும் மேலும் சான்றாக அமைகிறது.

நாம் எல்லோரும் எதிர்பார்ப்பது பொதுவாக இனவாதத்தை மூலதனமாக்கிய அரசியலை தவிர்த்து முன்மாதிரியான அரசியல் தலைவர்கள் வேண்டும் என்பதே. இதுவே பொதுவான மக்களின் நிலைப்பாடாகும். அப்படியான நிலைப்பாட்டையே சாணக்கியனிடம் முஸ்லிம் மக்கள் எதிர்பார்த்தனர். அத்தையை எண்ணம் கொண்டே #P2P யோடும் இணைந்தார்கள்.

கல்முனையின் தீர்வு குறித்து அதன் ஆள்புல எல்லைகள் அதன் நிர்வாகம் தொடர்பில் இரு தரப்பினரும் இனியாவது பேச்சு நடத்த முற்பட வேண்டும். இருதரப்பு விட்டுக் கொடுப்புகளுடன் நிரந்தர தீர்வை நோக்கிய பயணமாக இருத்தல் வேண்டும். அடாத்தாக ஒருதலைப் பட்சமாக தீர்வு காண இனி ஒருபோதும் முடியாது.
நீண்டகாலமாக வெளிநாட்டில் ஜீவிதம் நடத்திவிட்டு இலங்கைக்கு வந்து அரசியல்வாதியாகியுள்ள இராசமாணிக்கம் சாணக்கியன்  வடக்கு கிழக்கு மக்களின் பூர்வீகம், கலாச்சாரம், பிரச்சினைகள் தொடர்பில் நன்கு கற்றுக்கொள்ள வேண்டும். 
தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பில் நிறைய உள்வீட்டு பிரச்சினைகள் இருக்கும் போது, தமிழ் சமூகத்தில் காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை என பல டசின் பிரச்சினைகள் தொங்கிக்கொண்டிருக்க முஸ்லிம் சமூகத்தை நோக்கி நீலிக்கண்ணீர் வடித்து ஆடு நனைகிறது என ஓநாய்கள் அழுத கதையாக நடித்துக்கொண்டு இனவாதம் பேசிவருகிறார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, மட்டக்களப்பு கல்விவலயம், கல்முனை பிரதேச செயலக விவகாரம் என்பன தொடர்பில் முதலில் பூரண அறிவை பெற்றுக்கொள்ள வேண்டும். அவைகள் தனியே முஸ்லிங்களுக்கானது மட்டுமல்ல. அந்த பிரதேசத்தில் வாழும் தமிழ், முஸ்லிம், கிறிஸ்த்தவ, சிங்கள மக்களுக்கு சேவை வழங்குவதாகவே அமைந்துள்ளது. என்று அண்மைக்கால சாணாக்கியனின் போக்குகுறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ஏ.சி.யஹ்யாகான்  தெரிவித்துள்ளார்.



















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :