பி.எஸ்.ஐ.கனி-
சென்னை : எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம், மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் (19.01.21) செவ்வாய் கிழமை , சென்னை மண்ணடியில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், தமிழக அரசியல் சூழல்கள் குறித்தும், சட்டமன்ற தேர்தல் தொடர்பான கட்சியின் நடவடிக்கைகள் குறித்தும், நாட்டின் தற்போதைய சூழல் குறித்தும் நிர்வாகிகள் விரிவாக விவாதித்தனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : வரக்கூடிய 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக 234 தொகுதிகளுக்கும் தொகுதி தேர்தல் பணிக்குழு அமைக்கவும், மாவட்ட மற்றும் மண்டல அளவிலான தேர்தல் பணிக்குழு அமைக்கவும், பூத் கமிட்டிகளை பலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. மேலும், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.எம்.ரஃபீக் அகமது தலைமையில், மாநில பொருளாளர் வி.எம்.அபுதாஹிர், மாநில செயலாளர்கள் ரத்தினம், அபுபக்கர் சித்திக், வழக்கறிஞர் சபியா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் ராஜா முகமது, காசிநாததுரை ஆகியோரை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, தலைநகர் டெல்லியில் இரண்டு மாத காலமாக தொடர்ச்சியாக போராடி வரும் விவசாயிகள், எதிர்வரும் ஜன.26 குடியரசு தினத்தன்று டிராக்டர்கள் பேரணி நடத்த உள்ளனர். விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர்பான இந்த கோரிக்கை பேரணிக்கு ஆதரவாக நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சியும் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழகத்திலும் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் நமது நாட்டின் மதிப்புமிக்க 40 வீரர்கள் உயிரிழந்ததை தனது டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தும் உத்தியாக அர்னாப் கருதியது, பாலகோட் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து உரையாடியது, நீதிபதிகளை விலைக்கு வாங்குவது உள்ளிட்ட அர்னாப்பின் வாட்ஸ் அப் உரையாடல்கள் நாட்டின் பாதுகாப்பு குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. எனவே நாட்டின் முக்கிய ராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்ட பல முக்கிய ரகசியங்களை வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்துகொண்ட ரிபப்ளிக் தொலைக்காட்சியின் நிறுவனர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் அரசின் உயர்மட்டத்தில் உள்ள அவரது கூட்டாளிகளையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் அர்னாப்பின் ரிபப்ளிக் தொலைக்காட்சியையும் தடை செய்ய வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
0 comments :
Post a Comment