ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக கருதப்படுபவர்கள் ஆசிரியர்களே, அவர்களின் அளப்பரிய பங்களிப்பின் மூலமாகவே சகலமானவர்களும் தலை நிமிர்ந்து வாழ்வதற்கான அவகாசம் கிடைக்கிறது. நமக்குள் இருக்கின்ற ஆற்றல்களை வெளிக்கொணர்வதில் ஆசிரியர்கள் காட்டும் ஆர்வம் அலாதியானது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொத்துவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நமது கற்றல் தொடர்பான ஆர்வத்தையும் ஆற்றலையும் அதிகரிக்கச் செய்வதில், ஆசிரியர்களின் வகிபாகமே முதன்மையானது. வீரியமாய்ப் பரவி, உலகெங்கும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொவிட்19 காலத்தில், தொழில்நுட்பங்கள் மூலம் கற்றல் நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட்டன.
ஆனாலும், கல்வி தொடர்பான தொழில்நுட்ப விருத்திகள் நாளுக்கு நாள் பரந்து விரிந்தாலும், அவை வெறுமனே கருவிகள் மட்டுந்தான். ஆசிரியர்கள் இல்லாமல், அவர்களின் நெறியாள்கை இல்லாமல் வெறும் தொழில்நுட்பம் கற்றலைச் சாத்தியப்படுத்தாது என்பது வெள்ளிடைமலை.
நமது எண்ணங்களில் நல்லவற்றை விதைத்து, நாளை பற்றிய நம்பிக்கை செழிப்பாக வளரும்படியான ஏதுக்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் கடின உழைப்பிற்கு நிகரிருக்க முடியாது. இன்றைய நாளில், எனது ஒவ்வொரு பருவங்களிலும் ஆசிரியர்கள் தந்த உத்வேகங்களை எண்ணிப் பார்த்து அவர்கள் அனைவரையும் நன்றியுணர்வோடு நினைவுபடுத்துகிறேன்.
நமக்கு எவை எல்லாம் தெரியாது என அறிகின்ற போது, நாம் தெரியாதவைகளை தெரிந்து கொள்ள ஆர்வங் கொள்வோம். கற்றல் என்பது எல்லையில்லாதது. தொடர்ச்சியானது. தொடர்ந்து செல்வது. நமக்குத் தெரியாதது எவை என்பதைப் புடம் போட்டுக் காட்டுவதில் நமது ஆசிரியர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள்.
எல்லோருக்கும் முதலாவது ஆசிரியராக இருப்பது நம் பெற்றோர்கள் தாம். அவர்களிடமிருந்தே நாம் பலதையும் கற்றுக் கொள்கிறோம். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து, மாணவர்களிடம் உத்வேகத்தை உருவாக்கி, அவர்களை சமூகத்திற்கு நன்மைகளைச் செய்கின்றவர்களாக உருவாக்க முடியும் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment