இலங்கைக்கு அருகே நேற்று தீ பற்றி எறிந்த மசகு எண்ணெய் கப்பலில் காணாமல் போயிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டு பணியாளர் உயிரிழந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பலில் இன்று அதிகாலை வரையும் தீ எரிந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான MT New Diamond கப்பலில் எண்ணெய்க் கசிவினை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
பனாமா நாட்டின் தேசிய கொடியுடன் 2 இலட்சத்து 70 ஆயிரம் லீற்றர் மெற்றிக் தொன் மசகு எண்ணெய் மற்றும் ஆயிரத்து 700 மெற்றிக் தொன் டீசல் ஆகிவற்றுடன் குவைட்டில் இருந்து இந்தியா நோக்கி பயணித்த எண்ணெய்க் கப்பல், 38 கடல்மைல் தொலைவில் கிழக்கு கடற்பரப்பில் நேற்று முற்பகல் தீவிபத்துக்குள்ளானதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலின் சமையலறையில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாகவே தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தீப்பரவல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் கப்பலில் 23 பேர் பயணித்துள்ளதுடன் அவர்களுள் பெருமளவானவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த வர்த்தகக் கப்பலில் பயணித்த 19 பேர் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளதுடன் விபத்தில் காயமடைந்த குறித்த கப்பலின் பொறியியலாளர் காயமடைந்துள்ள நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர் குறித்த கப்பலின் கப்டனாக பொறுப்பு வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கப்பல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை விமானப்படைக்கு சொந்தமான BEACH CRAFT ரக கண்காணிப்பு விமானம் மற்றும் MI 17 ரக ஹெலிகொப்டர் ஆகியன பயன்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டையில் நங்கூரமிடப்பட்டுள்ள யுத்தக்கப்பல்கள் தீயினை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியன இந்த விடயம் தொடர்பில் நேற்று விசேட கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தன.
இதேவேளை பாரிய சேதங்கள் ஏற்படுமாயின் கடலுக்கு பாதிப்பு ஏற்படும் என கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் பொது முகாமையாளர் கலாநிதி டெர்னி பிரதாப் குமார தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாக இலங்கையின் கிழக்கு கடல் உட்பட தென்கடல் மற்றும் மேற்கு கடல் ஆகியன பாதிப்படையும் சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமையினை கட்டுப்படுத்துவதற்காக இதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு மீட்பு நடவடிக்கைகளில், வினைத்திறனுடன் செயற்பட்டு வருவதாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் பொது முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment