ஐ. ஏ. காதிர் கான்-
உழ்ஹிய்யா (குர்பான்) கடமையை, (03) திங்கட்கிழமை வரும் போயா தினத்தன்று மேற்கொள்ள வேண்டாம் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உடுநுவர தொகுதி அமைப்பாளரும், கண்டி மாவட்ட வேட்பாளருமான ஏ.எல்.எம். பாரிஸ், முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உழ்ஹிய்யாவுக்கான மிருகங்களை அறுப்பது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே வேட்பாளர் பாரிஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
முஸ்லிம்கள் உழ்ஹிய்யா (குர்பான்) தொடர்பில் மிகவும் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும். விசேடமாக, திங்கட்கிழமை வரும் போயா தினத்தில் குர்பான் கொடுப்பதைத் தவிர்ந்து கொள்ளவும்.
மறைமுகமாகவேனும் அன்றைய தினம் குர்பான் கொடுக்க வேண்டாம்.
அடுத்தவர்களுக்கு முன்மாதிரியானவர்களாக நடந்துகொள்வோம்.
இதேவேளை, பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நடக்கவும். குர்பான் மிருகங்களின் கழிவுகளை, ஆங்காங்கே கண்டவாறு வீசாமல், அவற்றை சுகாதார விதிமுறைகளைப் பேணி, அதற்கென தோண்டப்படும் குழிகளில் இடுமாறும் வேண்டுகின்றேன். அத்துடன், அடுத்த மத சகோதரர்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாதவாறு நடந்து கொள்ளவும்.
முஸ்லிம்கள் என்ற ரீதியில், நாம் எமது கெளரவத்தையும் கண்ணியத்தையும் பாதுகாத்து நடந்து கொள்வதே, தற்போதைய சூழ்நிலையில் நமக்கு நல்லது.
இன்றைய காலகட்டத்தில் இது நமக்கு கட்டாயத் தேவை என்பதை உணர்ந்து முஸ்லிம்களாகிய நாம் புரிந்து நடந்து கொள்வோம்.
0 comments :
Post a Comment