உலக இரத்ததான தினத்தினை முன்னிட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குறுதித் தட்டுபாட்டினை கவனத்திற் கொண்டு, (14) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, தெமட்டகொடை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தலைமையகத்தில் மாபெரும் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.
வை.எம்.எம்.ஏ. பேரவையின் பதில் தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி தலைமையில் இடம்பெற்ற இவ் இரத்ததான நிகழ்வில், பெருந்திரளான ஆண்களும் பெண்களும் இன, மத, மொழி பேதமின்றி கலந்துகொண்டு, இரத்த தானங்களை வழங்கி பிறருயிர் காக்கும் இம்மகத்தான பணியில் இணைந்து கொண்டனர்.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் ஆலோசனையின் கீழ் மத்திய வை.எம்.எம்.ஏ. கிளையும், வை.டப்ளியூ.எம்.ஏ. (பெண்கள் பிரிவும்) இணைந்து நடாத்திய இம்மாபெரும் இரத்ததான நிகழ்வில், அஷ்ஷெய்க் நுஸ்ரத் நெளபர் (அ.இ.ஜ.உ.), வெலிமட சுமண ஸ்தீவர தேரர், தெமட்டகொடை பொலிஸ் பொறுப்பதிகாரி சாந்த ஜயசிங்க, கொழும்பு மாநகர சபை சுகாதாரப் பரிசோதகர் அப்துர் ரஹ்மான், தேசிய இரத்த வங்கி டாக்டர் ஷானிகா சில்வா, வை.டப்ளியூ.எம்.ஏ. (மகளிர் பிரிவு) தலைவி பவாஸா தாஹா, மத்திய வை.எம்.எம்.ஏ. தலைவர் எம்.என். காமில், உப தலைவர் மொஹமட் இம்ரான் ஆகியோர் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.