திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியாற்றுமுனை கரையோரப் பகுதியில் டைனமைட் வெடி பொருள் வெடித்ததில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று (09) மதியம் இடம் பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கரையோரத்தில் டைனமைட் வெடிபொருளினை இரும்பு வெட்டப்படும் சிறிய ரக வாளால், அறுத்துக் கட்டும்போது, வெடித்துச் சிதறியுள்ளது.
இதில் குறித்த இருவரும் இணைந்து கரையோர பகுதியில் வைத்து செயற்பட்டபோதே, இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
கிண்ணியா, இடிமன் பகுதியை சேர்ந்த செயினுலாப்தீன் நவாஸ் (37), எனும் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அத்தோடு கிண்ணியா, பெரியாற்றுமுனையை சேர்ந்த ஜௌபர் ரிசான் (26) எனும் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.