எஸ்.எம்.எம்.முர்ஷித்-
கண்டி மாவட்டத்தின் மினிப்பே பிரதேச செயலாளரின் வேண்டுகோளிற்கமைய மட்டக்களப்பைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படும் தேசிய தன்னார்வத் தொண்டு நிறுவனமான அம்கோர் நிறுவனத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.
உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கொவிட் 19 நோய்த்தொற்றினையடுத்து நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட தொடர் ஊரடங்கினால் கண்டி மாவட்டத்தின் மினிப்பே பிரதேச மக்களும் தமது வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் பாதிக்கப்பட்டனர்.
அம்கோர் நிறுவனத்தின் மட்டக்களப்பு அலுவலகத்தினால் மினிப்பே பிரதேச மக்களுக்காக சுமார் 1.6 மில்லியன் ரூபாய் செலவில் ஒவ்வொன்றும் 1,080 ரூபாய் பெறுமதியான 1536 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இப்பொதிகள் மட்டக்களப்பிலிருந்து கொண்டு செல்லப்பட்டு அம்கோர் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ப.முரளிதரன் மினிப்பே பிரதேச செயலாளர் திருமதி.வத்சலா மாரம்பகேவிடம் கையளிக்கப்பட்டது.
இதன் போது அம்கோர் நிறுவனத்தின் சிரேஸ்ட முகாமையாளர் எஸ்.சிவயோகராஜன், உதவி முகாமையாளர் பிறிஸ்லி றோய், திட்ட உத்தியோகத்தர் அ.செல்வக்குமார் மற்றும் உதவி பிரதேச செயலாளர் கீர்த்தி திசாநாயக்க, பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், பௌத்த மதகுருமார் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
நாட்டில் ஏற்பட்ட கொவிட் 19 நோய்த்தொற்றினையடுத்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் மட்டக்களப்பு, திருகோணமலை, பொலநறுவை, கம்பகா மற்றும் கண்டி மாவட்டங்களில் இவ்வாறான உலர் உணவு விநியோகம் அம்கோர் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.