பெருந்தோட்டங்களில் தோட்டங்களில் காணப்படும் தரிசு நிலங்களை அத்தோட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களின் ஊடாக குத்தகை முறையில் பெருந்தோட்ட இளைஞர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளருமான ஜீவன் குமாரவேல் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்
கொழும்பு மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து கொவிட் 19 வைரஸ் பாதிப்பின் காரணமாக பெருந்தோட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். இவர்களுக்கு சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் ஆலோசனைக்கமைவாக புசல்லாவை பெருந்தோட்ட யாக்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சமிந்த மற்றும் கண்டி மாவட்டத்திற்கு உட்பட்ட தோட்டங்களின் முகாமையாளர்களுக்கும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பரத் அருள்சாமி,பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் கண்டி பிராந்தியத்தின் பணிப்பாளர் முனவீர, அந்நிதியத்தின் விசேடசெயல் திட்டங்களுக்கு பொறுப்பான ரத்வத்த ஆகியோர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று 21.5.2020 இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் தோட்டங்களில் காணப்படும் தரிசுநிலங்களை அத்தோட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களின் ஊடாக குத்தகை முறையில் இளைஞர் யுவதிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான வழிமுறைகளும் அதற்காக மேற்கொள்ளப்படவேண்டிய நடைமுறைகளையும் விவசாயம், பண்ணை மற்றும் கைத்தொழில் போன்றவற்றை மேற்கொள்வதற்கான அறிவுரைகள் மற்றும் வசதிவாய்ப்புக்களை அரசாங்கத்தின் ஊடாக பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் பெருவாரியாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக ஒருசுழற்சி முறைபயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளவும் வருடம் முழுவதும் வருமானத்தை பெற்றுக்கொள்ளும்படியான செய்முறைகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.இதனடிப்படையில் முதல் கட்டமாக இரண்டு தோட்டங்களில் இம்முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன் மூலம் தோட்ட தொழிலாளர்களும் இளைஞர் யுவதிகளும் அந்ததோட்டங்களை அண்மித்துள்ள கிராமங்களும் மற்றும் தோட்ட கம்பனிகளும் நன்மையடையும் விதமாக ஒருதிட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. முதலாவதாக இவ்வேலைத்திட்டம் புசலால்லவை பெருந்தோட்ட கம்பியின் இயங்கும் டெல்டா,ஸ்டெலவ்ஸ்பெக் ஆகிய தோட்டங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இத்தோட்டங்களில் காணப்படும் தரிசு நிலங்களை அத்தோட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களின் ஊடாக குத்தகை முறையில் பெற்று அங்கு இக் கூட்டுறவு சங்கத்திற்கு முழு அதிகாரங்களும் வழங்கப்படும். ஒரு தோட்டத்தில் காணப்படும் முழு தரிசு நிலமும் இக் கூட்டுறவு சங்கத்திற்கே வழங்கப்படும். அதன் ஊடாகவே இளைஞர் யுவதிகள் விவசாயம் செய்வதற்கு நிலங்கள் பகிந்தளிக்கப்படும். விவசாயம் மேற்கொள்வதற்கு அரசாங்கத்தின் உதவியுடன் நிதி உதவி வழங்கப்படும். விவசாயத்தினால் கிடைக்கும் இலாபத்தில் 50 வீதம் பெருந்தோட்ட கம்பனிக்கும் 50 வீதம் இளைஞர் கூட்டுறவு சங்கத்திற்கும் வழங்கப்படும். மேலும் இங்கு பண்ணை வளர்ப்பையும் ஊக்க நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.