கொவிட்19 எனப்படும் கொரோனா வைரஸின் தாக்கத்தின் காரணமாக நிர்க்கதியான 100 குடும்பங்களுக்கு உலருணவு மற்றும் உதவு தொகையும் போன்றன சாய்ந்தமருது அல் அமானா நற்பணி மன்றத்தினால் வழங்கிவைக்கும் நிகழ்வு மன்றத்தின் தலைவர் அல் ஹாஜ் ஏ.எல்.ஏ.பரீட் அவர்களது தலைமையில் சாய்ந்தமருது-16, தாருஸ்ஸலாம் வீதியில் அமைந்துள்ள மன்றத்தின் காரியாலயத்தில் 2020.05.19 ஆம் திகதி இடம்பெற்றது.
நிகழ்வுக்கு கல்முனை மாநகரசபை உறுப்பினர் எம்.ஐ.ஏ.அஸீஸ் கௌரவ அதிதியாக கலந்து கொண்டிருந்தார். அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள், உலமாக்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்த குறித்த நிகழ்வில் உரையாற்றிய அல் ஹாஜ் ஏ.எல்.ஏ.பரீட், கடந்த 2004 இல் இந்த பிராந்தியத்தை உலுக்கிய சுனாமியால் நிர்க்கதியானவர்களை ஒன்று திரட்டி உருவாக்கப்பட்ட அல் அமானா நற்பணி மன்றம், கடந்த 15 வருடங்களாக அல்லலுறும் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருவதாகவும் அதன் ஒரு அங்கமாகவே கொரோனா வைரஸின் தாக்கத்தின் காரணமாக நிர்க்கதியான 100 குடும்பங்களுக்கு உலருணவு மற்றும் உதவு தொகைகளை வழங்க தீர்மானித்ததாகவும் தெரிவித்தார்.
அல் அமானா நற்பணி மன்றத்தை 2004 இன் பின்னர் ஆரம்பித்த போதும் 2009 ஆண்டளவிலேயே ஒரு சமூகசேவை அமைப்பாக பதிவு செய்ததாகவும் அதில் 850 அங்கத்தவர்கள் அங்கம் வகிப்பதாகவும் தெரிவித்தார்.
மிகக்குறுகிய நிலப்பரப்பைக் கொண்ட சாய்ந்தமருதுக்குள் சுமார் 35000 மக்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர்களில் வீடு ஒன்றைக் கட்டிக்கொள்ள முடியாத இடம் இல்லாத பலர் இருப்பதாகவும் இடம் ஒன்று இல்லாததன் காரணமாக தங்களது குமார் பிள்ளைகளை திருமணம் முடித்து வைக்கக்கூட வாய்ப்பில்லாத பலர் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய சாய்ந்தமருதுக்கு இன்னும் ஒரு நிலப்பரப்பு காலத்தின் தேவை என்றும் அது சாய்ந்தமருதின் மேற்குப் புறமாக இருக்கின்ற பல ஆண்டுகாலமாக செய்கை பண்ணப்படாத காணிகளே என்றும் தெரிவித்தார்.
பின்னர் பயனாளிகளுக்கான உலர் உணவுப்பொதிகளும் உதவு தொகைகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன் கொரோனா வைரஸின் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் பிராத்தனைகளும் இடம்பெற்றன.