பெரியநீலாவணை தொடர்மாடி வீட்டுத்திட்டத்தில் வட்ஸ் அமைப்பின் ஏற்பாட்டில் இலவசமாக நடைபெற்றுவருகின்ற மாலைநேர வகுப்பின் ஏற்பாட்டாளர்களது ஒழுங்கமைப்பில் பெரியநீலாவணைத் தொடர்மாடியில் வசிக்கின்ற பொதுமக்களுக்கும் அவ்வகுப்பில் கற்றுக்கொண்டிருக்கின்ற மாணவர்களது பெற்றோர்களுக்கும் வட்ஸ் அமைப்பின் மூலம் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு வட்ஸ் அமைப்பின் மட்டக்களப்புக் கிளை உறுப்பினரின் தலைமையில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு பூராகவும் முடக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் என்பன பாதிக்கப்பட்ட நிலையில் இவ் உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
அங்கு வசிக்கும் 474 குடும்பங்களுக்கு 1000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் நான்கு இலட்சத்து எழுபத்து நான்காயிரம் (474000)செலவு செய்யப்பட்டு இவ் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
இவ் நிவாரணப் பொதிகளை கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலாளர் ஜெ.அதிசயராஜ் மற்றும் அப்பகுதி கிராமசேவகர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு உலர் உணவுகளை வழங்கிவைத்தனர்.
வட்ஸ் அமைப்பானது 2018 ஆம் ஆண்டில் இருந்து சுனாமியினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பெரியநீலாவணை தொடர்மாடியில் வசிக்கின்ற மாணவர்களின் நலனைக்கருத்தில் கொண்டு தரம் 1 தொடக்கம் 7 வரை சகல பாடங்களையும் இலவசமாக மாலைநேரத்தில் கற்பிப்பதற்கு மாதாந்தம் 110000 ரூபா செலவுசெய்து வருகின்றமை அனைவராலும் போற்றப்படுகின்ற செயற்பாடாக இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இவ்வாறான உதவிகளைச் செய்துகொண்டிருக்கும் லண்டன் வட்ஸ் அமைப்பின் அங்கத்தவர்கள் அதேபோன்று மட்டக்களப்பு கிளை வட்ஸ் அமைப்பினர்களுக்கும் அப்பகுதி மக்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.


