நுவரெலியா மாவட்டத்தில் இரசாயண உரத்திற்கு பெரும் தட்டுபாடு நிலவுகின்றது. நுவரெலியாவில் 9ஆம் திகதி வியாழக்கிழமை ஊரடங்கு காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட பின்னர் நுவரெலியா நகர பழையக்ககடை வீதியிலுள்ள விவசாய உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் 50 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை 1150 ரூபாவிற்கு விற்பனை செய்ய வேண்டிய உரத்தை 1500 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக உரத்தை கொள்வனவு செய்த மரக்கறி உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்தனர்.
நுவரெலியா மாட்டத்திலுள்ள நுவரெலியா, கந்தப்பளை, பொரலந்த, இராகலை , நானுஓயா , தலவாக்கலை, அக்கரப்பத்தனை . டயகம உட்பட பல பிரதேசங்களில் மரக்கறி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயண உரம் வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் குறிப்பிட்ட காலத்தில் மரக்கறிகளுக்கு பசளையிட முடியாமல் விவசாயிகள் அவஸ்த்தைப்படுகின்றனர். நுவரெலியாவிலுள்ள ஒரு சில வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரம் ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத வேளையில் கொழும்பிலிருந்து உரம் கொண்டுவரப்பட்டாலும் தங்களது வர்த்தக நிலையத்தில் தொடர்ந்து உரம்,கிருமிநாசினிகளை பெற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு மாத்திரம் உரம் விற்பனை செய்வதாகவும் இன்னும் ஒரு சில இடங்களில் 1150 ரூபாவிற்கு விற்பனை செய்ய வேண்டிய உரத்தை 1300 ரூபா முதல் 1500 ரூபா வரை விற்பனை செய்வதாகவும் சம்பந்தப்பட்ட விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி உற்பத்தி தொழிலை பிரதான தொழிலாக அதிகமானோர் ஈடுப்பட்டு வருகின்றனர். நுவரெலியா பிரதேசத்திலுள்ள பெரும் தொகையான தோட்டத் தொழிலாளர்களும் மரக்கறி தோட்டத் தொழிலையே நம்பி தங்களது வாழ்வாதாரத்தை கொண்டு செல்கின்றனர்.எனவே நுவரெலியா மாவட்ட மரக்கறி உற்பத்தியை பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு உரம் பெற்றுக் கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் அரசாங்கமும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நுவரெலியா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
