அக்கரைப்பற்று கொரோனா தொற்றாளருடன் தொடர்வுப்பட்ட 10 நபர்களும் பொலன்னறுவை தமன்ன கொரோனா தடுப்பு விசேட மருத்துவமனைக்கு இராணுவத்தினரின் அனுமதியுடன் அனுப்பிவைக்கப்பட்டனர் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பாக காலை ஊடகவியலளார்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கட்டார் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த நிலையில் நோய் தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பொலன்னறுவை தமன்ன கொரோனா விசேட மருத்துவமனைக்கு இராணுவத்தினரின் அனுமதியுடன் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.இது தவிர தொற்று நோய்க்கு உள்ளான நபர் ஜனாசா வீட்டில் கலந்து கொள்ளவில்லை எனவும் அவர் தனது வீட்டில் இருந்து வெளியேறவில்லை என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.தேவையற்ற வதந்திகளை பரப்புவதை விட்டு சகலரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன் தொற்றுக்குள்ளான நபருடன் பலரும் பழகி இருப்பதால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் 10 பேரை தற்போது அடையாளம் கண்டு குறித்த பகுதியை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் மேற்கொண்டுள்ளனர்.